Tuesday, December 20, 2011

பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாது. உறுதியாக கூறுகின்றார் ஜனாதிபதி

தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரும் பொலிஸ் அதிகாரங்களை எவ்விதத்திலும் வழங்க அரசாங்கம் தயாரில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் செய்தி பொறுப்பாளர்கள் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்ரிரிஈ யினரின் விருப்பு வெறுப்புக்களுடனேயே பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்கிறது. அவர்களிடம் ஈழக்கனவு தொடர்ந்தும் இருந்து வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்கு தெரிவு குழுவில் பிரதிநிதிகளை நிறுத்துவதையே அவர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு இல்லாமல் நாட்டிற்கு எதிராக சர்வதேசத்திற்கு சென்று இலங்கையின் மீது சர்வதேச அழுத்தங்களை மேற்கொள்வதற்கு எடுக்கப்படும் கீழ்த்தரமான அரசியல் முயற்சி தொடர்பாக ஜனாதிபதி அதிர்ப்தியை வெளியிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்தில் எல்ரிரிஈ ஆதரவாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு முயற்சித்து வருவதாகவும் ஜனாதிபதி குற்றஞ்சாட்டினார்.

சர்வதேசத்திடம் நாட்டிற்கு எதிரான விசாரணையொன்றை கோருவது நாட்;டிற்கு எதிராக புரியும் பாரிய துரோகச் செயலென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதே நேரம் கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நீண்ட கால யுத்தத்தின் இறுதி சில தினங்கள் தொடர்பாக மாத்திரம் கண்டறிவதற்கு சர்வதேசம் மேற்கொள்ளும் முயற்சி தொடர்பாக ஜனாhதிபதி அதிர்ப்தியை வெளியிட்டார்.

வேறு நாடுகளில் இது போன்ற சம்பவங்களின் போது மௌனம் சாதிக்கும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இலங்கை தொடர்பாக செயற்படும் விதம் நாட்டிற்கும் பல சர்வதேச நாடுகளுக்கும் ஒரு கேள்விக்குறியாகவுள்ளதென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment