Thursday, November 3, 2011

இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்க அமெரிக்காவுக்கு அதிகளவு ஆர்வம்

இந்தியாவுடன், நவீன ராணுவத் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதற்கும், போர் விமானங்களை மேம்படுத்துவதில் இணைந்து செயல்படவும் அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான "பென்டகன்' அமெரிக்க காங்கிரஸ் சபையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு அமெரிக்கா, 6 பில்லியன் டாலர் அளவிற்கு ஆயுதங்களை விற்றுள்ளது. ஆயுத விற்பனை, கூட்டுப் பயிற்சி மூலம் இந்தியா உடனான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது.

அதோடு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றிலும் இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் விரும்புகிறது. இருதரப்பு ராணுவ உறவும் குறிப்பிடத் தக்க அளவில், வளர்ந்துள்ளது.

இதுவரை இரு நாட்டு ராணுவங்களும் இணைந்து, 56 முறை கூட்டுப் பயிற்சி மேற்கொண்டுள்ளன. இது பிற நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள கூட்டுப் பயிற்சிகளை விட அதிகம். அமெரிக்காவின் எப் -16, 18 மற்றும் 126 ரக போர் விமானங்களை வேண்டாம் என இந்தியா கூறியது ஒரு பின்னடைவுதான் என்றாலும் கூட, "ஜாயின்ட் ஸ்ட்ரைக் பைட்டர்' ரக போர் விமானங்கள் இந்தியாவுக்கு ஏற்றதாக இருக்கும். இவ்வாறு "பென்டகன்' தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment