Sunday, October 30, 2011

சிறைவைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

அந்தமான் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கந்தக்குளிய பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று சனிக்கிழமை காலை நீர்கொழும்பு-மங்குளிய பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேசத்தின் மீனவ பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் அருட் சகோதரிகள் அருட்சகோதரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக மாகாண மீன்பிடித் துறை அமைச்சர் சனத் நிசாந்த வழங்கிய வாக்குறுதியை அடுத்து நேற்று இரவு அந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தும் விஷேட செய்தியாளர் மாநாடு நாளை பிற்பகல் 2 மணிக்கு கந்தக்குளி விகாரையில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. < செய்தியாளர் –எம்.இஸட். ஷாஜஹான்

No comments:

Post a Comment