Thursday, October 27, 2011

கடாபியின் படுகொலை தொடர்பாக ஹக்கீம், அஸ்வர் கடும் கண்டனம்.

கடாபி கொலை செய்யப்பட்டமை தொடர்பாக வெளியாகிக் கொண்டிருக்கும் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
லிபியத் தலைவர் கடாபி கீழ்தரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோர் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பில் அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

லிபிய மக்கள் தமது ஆட்சித்தலைவருக்கு எதிராக கிளர்ந்தெழுவதானால் அவர்கள் சுயமாகவே அச்செயலில் ஈடுபட்டிருக்கவேண்டும். அவ்வாறின்றி நேட்டோ அமைப்பினால் நன்கு திட்டமிடப்பட்டு, வடிவமைக்கப்பட்டு லிபிய மக்களை ஏவிவிட்டு கடாபியின் படுகொலை படுமோசமான முறையில் அரங்கேற்றப்பட்டிருப்பது அவ்வமைப்பின் கீழ்த்தரமான நோக்கத்தை பறைசாற்றுகிறது.

கடாபியிடம் எத்தகைய தவறுகள், குறைகள் இருந்தாலும் சட்டத்தின் முன்தோன்றுவதற்கு அவருக்கு அடிப்படை மனித உரிமையின் கீழ் இடமிருந்தது. அவ்வாறின்றி கைது செய்து மிலேச்சத்தனமாக் கொலை செய்தது எந்த நீதியில் அனுமதிக்கப்பட்டுள்ளது? நீதி விசாரணைக்கு கடாபியை உட்படுத்தாமல் கீழ்த்தரமான, கேவலமான முறையில் கடாபியை படுகொலை செய்வதற்கு மனித உரிமைகளின் காவலர்கள் என தம்மைத்தாமே கூறிக்கொள்பவர்கள் இந்த கேவலத்திற்கு வழிவகுத்திருக்கிறார்கள்.

இதேவேளை, முஸ்லிம் உலகத் தலைவர்களை கருவறுக்கும் நடவடிக்கைகளை மேற்குலக வல்லரசு நாடுகள் வேகமாக மேற்கொண்டு வருவதை லிபியாவின் முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபியின் படுகொலை மூலம் உலகம் உணரத் தலைப்பட்டுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.

மௌலவி காத்தான்குடி பௌஸ் எழுதிய 'எகிப்து முதல் இலங்கை வரை இஸ்லாமியர்களின் இசைஞானம்' ஆய்வு நூல் வெளியீட்டு விழா பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியில் நடைபெற்ற போது நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றகையில் குறிப்பிட்டுள்ளயதாவது,

கேர்ணல் கடாபி ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மற்றும் அநீதிகளுக்கும் அவலங்களுக்கும் ஆளாகிய மக்களுக்காக சர்வதேச ரீதியில் குரல் கொடுக்கும் சக்தியாக திகழ்ந்தார். இலங்கையின் உற்ற நண்பர் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நம்நாட்டுக்கு பல வழிகளிலும் உதவினார். உலக முஸ்லிம்களுக்கு உதவி செய்தவர்.

இவ்வாறான ஒருவர் மிகவும் பயங்கரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் படுகொலை குறித்து கேர்ணல் கடாபியிடமிருந்து உதவிகளைப் பெற்றவர்களும் ஏனைய முஸ்லிம் இயக்கங்களும் தமது கண்டனத்தை தெரிவிக்காதுள்ளமை புரியாத புதிராகவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.




















2 comments:

  1. பிரபாகரனுடைய சடலத்தையும் இப்படித்தான் உரிஞ்சுபோட்டு கொண்டுபோனாங்கள் இதையும் இப்படித்தான் கொண்டுபோறாங்கள். என்ன ஒற்றுமை? ஏல்லாம் மேற்குலகுதான் என்று சொல்லலாமா?

    ReplyDelete
  2. "கடாபியிடம் எத்தகைய தவறுகள், குறைகள் இருந்தாலும் சட்டத்தின் முன்தோன்றுவதற்கு அவருக்கு அடிப்படை மனித உரிமையின் கீழ் இடமிருந்தது. அவ்வாறின்றி கைது செய்து மிலேச்சத்தனமாக் கொலை செய்தது எந்த நீதியில் அனுமதிக்கப்பட்டுள்ளது? நீதி விசாரணைக்கு கடாபியை உட்படுத்தாமல் கீழ்த்தரமான, கேவலமான முறையில் கடாபியை படுகொலை செய்வதற்கு மனித உரிமைகளின் காவலர்கள் என தம்மைத்தாமே கூறிக்கொள்பவர்கள் இந்த கேவலத்திற்கு வழிவகுத்திருக்கிறார்கள்"

    என்று சொல்றத்துக்கு உள்ள தில்லுக்கு ரவுப் ஹக்கீம் அமைச்சருக்கு ஒரு சலூட், ஏன் என்றால் பிரபாகரனின் உடலத்தை காட்டியபோது அவரை ஏகத் தலைவர் என ஏற்றுக்கொண்டு பாராளுமன்றில் நின்ற 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தன்னும் அவரது உடலை ஏற்பதற்கு முன்வரவில்லை. பாவம் அநாதையாக செல்லவேண்டியாயிற்று

    ReplyDelete