Tuesday, October 25, 2011

போர் நடந்தால் பாகிஸ்தானுக்கு ஆதரவு:ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய்

இந்தியாவோ, அமெரிக்காவோ பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்போம் என ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாயி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு சகோதர தேசம் என்பதால் சதிச்செய்ய துணைப்போகமாட்டோம் என ஹமீத் கர்ஸாய் பாகிஸ்தானின் ஜியோ டி.விக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மையற்ற சூழலை உருவாக்க பாகிஸ்தான் முயலுவதாகவும், தீவிரவாதத்திற்கெதிரான போரில் பாகிஸ்தான் இரட்டைவேடம் போடுவதாகவும் ஹமீத் கர்ஸாய் குற்றம் சாட்டியதால் இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.மேலும் அண்மையில் ஆப்கானிஸ்தான் இந்தியாவுடன் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதும் பாகிஸ்தானை அதிருப்திக்குள்ளாக்கியது.

இந்நிலையில் பாகிஸ்தானை குளிர்வைக்கும் விதத்தில் ஹமீத் கர்ஸாய் பேட்டியளித்துள்ளார். ஆப்கானில் அமெரிக்க படையினரின் இருப்பு அதிகரிப்பது பாகிஸ்தானை அதிருப்தியடையச்செய்தது.பாக்.-ஆப்கான் எல்லையில் அமெரிக்கா படைகளை குவிப்பதற்கு எதிராக அண்மையில் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது.

No comments:

Post a Comment