Tuesday, September 20, 2011

அமெரிக்கா சென்றடைந்த ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு.

ஐ.நா. சபையின் 66 வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விற்கு அங்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இவ்வரவேற்பு வைபவத்தில் ஐ.நா விற்கான இலங்கைத் தூதர் பாலித கோகன்ன மற்றும் பிரதி தூதர் சவேந்திர சில்வா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியின் அமெரிக்க வருகை இலங்கை தொடர்பான வதந்திகளை சர்வதேசத்திற்கு விளக்குவதற்கு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என ஐ.நா விற்கான பிரதி தூதர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது உரையின்போது தருஸ்மன் அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டதற்கான அதிருப்தியையும் கண்டணத்தையும் வெளிவிடுவார் ஜனாதிபதி என செய்திகள் வெளியாகியுள்ளது.

அத்துடன் ஐ.நா வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்து பேசவுள்ள ஜனாதிபதி ஐ.நா வுடன் தொடர்பு பட்டிராத தனிநபர்களால் தயாரிக்கப்பட்ட தருஸ்மன் அறிக்கையை இலங்கை அரசிற்கு எவ்வித முன்னறிவித்தலுமின்றி ஐ.நா வின் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்தமை தொடர்பில் அவரிடம் வினவவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேநேரம் அமெரிக்காவில் தங்கியிருக்கும் போது ஜனாதிபதி பல்வேறு உத்தியோக பூர்வ சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 66 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் செல்லும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அங்கு சந்தித்துப் பேசவுள்ளார் என புதுடில்லி தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது வட-கிழக்கு தமிழர் பிரச்சினை, மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் கலந்துரையாடுவார் எனத் தெரிவித்துள்ள புதுடில்லி, அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கும் திட்டம் எதுவும் மன்மோகன் சிங்கிடம் இல்லை என்றும் கூறியது.





No comments:

Post a Comment