Sunday, September 11, 2011

முகாமையாளர்களுக்கு பெரிய மூளை உள்ளது –அவுஸ்திரேலிய ஆய்வு

பணியின் போது மற்றவர்களை முகாமை செய்வதானது மூளையின் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி வயதடையும் சமயத்தில் மூளையின் ஞாபகசக்தி மற்றும் கற்கும் பகுதி என்பவற்றை பாதுகாப்பதாக அவுஸ்திரேலிய புதிய ஆய்வொன்று கூறுகின்றது. தென் வேல்ஸ் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

ஒருவரின் பணியிட வாழ்க்கையிலான முகாமைத்துவ அனுபவத்துக்கும் அவரது கற்றல் மற்றும் ஞாபகத்துக்கு பொறுப்பான மூளையின் அளவுக்குமுள்ள தொடர்பு குறித்து தெளிவாக இனம் காணப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். மேற்படி மூளைப்பகுதியானது 80 வயதுக்கு மேற்பட்ட வயோதிப காலத்தில் கற்கும் ஆற்றலை தீர்மானிக்கும் பகுதியாகும்.

ஒரு நபரால் மேற்பார்வை செய்யப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப மூளையின் அளவு அதிகரிப்பது எமது ஆய்வில் தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது என இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய மருத்துவ கலாநிதி மைக்கே வாலென்சுயலா தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது. குறுகிய கால அனுபவம், உணர்வு ரீதியான மதிநுட்பம் என்பன உள்ளடங்கலான அரிய மனோவியல் ஆற்றல்கள் மற்றவர்களை முகாமை செய்வதற்கு தேவைப்படுவதாக அவர் கூறினார் 75 வயதுக்கும் 92 வயதுக்கும் இடைப்பட்டவர்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் அனைவரது மூளைகளும் எம்.ஆர்.ஐ. ஊடு காட்டும் கருவிகள் மூலம் படமெடுக்கப்பட்டன இதன்போது மற்றவர்களை முகாமை செய்யும் அனுபவமுடையவர்களின் மூளையின் நினைவாற்றல் மற்றும் கற்கை ஆற்றலுக்குரிய பகுதி பெரிதாக காணப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

1 comment: