இன்று அலரி மாளிகையில் தினமும் "தன்சல" வழங்கப்படுகிறது. முழு நாட்டு மக்களுக்கும் உணவு வழங்கும் முறையே அவசியமாகும். தேர்ந்தெடுத்த மக்களுக்கு மட்டுமல்ல. நாட்டில் உள்ள சகல மக்களுக்கும் உணவு வழங்கப்பட வேண்டும். எமது தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டது போல் அலரி மாளிகையின் தானசாலையில் சாப்பிட்டு விட்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.
நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலுக்காக நேற்று இரவு நடை பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜயலத் ஜயவர்தன நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான வேட்பாளரும் மாநகர சபையின் முன்னாள் எதிர் கட்சித் தலைவருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து, மேல்மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீநாத் பெரேரா மற்றும் வேட்பாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜயலத் ஜயவர்தன அங்கு உரையாற்றுகையில்,
நீர்கொழும்பு நகரில் இடம் பெறுகின்ற துஷ்டச் செயல்கள் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். விபச்சாரம், சட்டவிரோத மணல் அகழ்வு, கள்ளச்சாராயம் போன்றவை இங்கு அதிகரித்து காணப்படுகின்றன. இன்று நகரில் உள்ள வீதிகளும் ஒழுங்கைகளும் புனரமைப்புச் செய்யபடுகின்றன. வீதிகள் கார்பர்ட் போடப்படுகின்றன. இவையெல்லாம் அரசியல்வாதிகளினதோ ஜனாதிபதியினதோ சொந்தப் பணமல்ல மக்களின் பணமாகும். பொருட்களின் விலைகளை அதிகரித்தும்,வரிகளை அறவிட்டும் அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
செய்தியாளர்- எம் .இஸட். ஷாஜஹான்
No comments:
Post a Comment