Sunday, September 4, 2011

அடேல் பாலசிங்கம் மீது போர்குற்ற வழக்குத் தாக்கல்.

புலிகளின் அலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மீது போர்குற்ற வழக்கு தாக்கல் செய்வதற்கு பிரித்தானியவாழ் இலங்கையர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழ் சிங்கள மக்களை கொண்ட பொது அமைப்புக்களே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

புலிகளின் பெண்கள் அணி தலைவியாகவிருந்த அடேல் பாலசிங்கம் வன்னியில் தங்கியிருந்த காலத்தில் புலிகளின் பயிற்சி முகாம்களில் பெண்சிறுவர்களுக்கான பயிற்சி வழங்கல்களில் ஈடுபட்டிருந்தார் எனவும் இவ்யுவதிகளை மூளைச்சலவை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என்பதையும் அடிப்படையாக வைத்தே இவ்வழக்குகள் பதிவாகவுள்ளன.

பயிற்சியை முடித்து வெளியேறும் பெண்புலிகளின் கழுத்துகளில் சயனைட் வில்லைகளை அணிவித்து அவர்களை அடேல் கொலைக்களத்திற்கு அனுப்பியதற்கான ஆதார வீடியோக்கள் அன்று புலிகளின் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இன்று அவ்வீடியோக்கள் அடேல் பிற நாடு ஒன்றினுள் சட்டவிரோதமாக நுழைந்து அந்நாட்டின் குடிமக்களை அரசாங்கத்திற்கு எதிராக போரிட தூண்டினார் என்ற குற்றச்சாட்டுக்கு சாட்சியமாக அமைந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் பிறந்த அடேல், பயங்கரவாத இயக்கம் ஒன்றின் அலோசகரை திருணம் செய்தது மாத்திரமல்லாமல் அவ்வியக்கத்தின் பெண்கள் படையணியின் தலைவியாகவும் விளங்கினார். இதன் விளைவாக இவர் தனது தாய்நாட்டினுள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டார். இவ்வாறு அவுஸ்திரேலியாவினுள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் புலிகளின் பணத்தில் வசித்து வந்தார்.

இத்தருணத்தில் புலிகளின் தீவிர ஆதரவாளரும் லண்டனில் அரசியல் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிவந்தவருமான ஜெயதேவன் பிரித்தானிய அரசியல்வாதிகளின் உதவியை பெற்று பிரித்தானியாவினுள் கொண்டுவந்தார்.

பிரித்தானியாவில் அவர் அன்ரன் பாலசிங்கத்துடன் வாழ்ந்த காலம்தொட்டு பயங்கரவாத இயக்கத்தின் முழு நேர செயற்பாட்டாளராக இருந்து வந்துள்ளதுடன், அன்றிலிருந்து இன்றுவரை எவ்வித தொழிலும் புரியாமல் புலிகளின் நிதியிலேயே வாழ்கையை ஓட்டிவந்துள்ளார்.

அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தின் பின்னர் கூட அவருக்கான கொடுப்பனவுகள் புலிகளினால் வழங்கப்பட்டுவருவதாக நம்பப்படுகின்றது.

1 comment:

  1. Every action has a opposite and equal reaction.

    ReplyDelete