Tuesday, September 13, 2011

ஐ.நா அமைதிப்படையினரின் அட்டகாசம்.

கலவரம் நடக்கும் நாடுகளில் அமைதியை ஏற்படுத்த ஐ.நா. சார்பில் அனுப்பப்படும் அமைதிப் படையினர் மீது சமீபகாலமாக கடத்தல், பாலியல் புகார்கள் அதிகரித்துள்ளன. ஹைதி நாட்டில் 18 வயது பெண்ணை உருகுவே நாட்டை சேர்ந்த அமைதி படையினர் பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

எங்கெல்லாம் இனக் கலவரத்தால் அப்பாவிகள் பலியாகிறார்களோ அங்கெல்லாம் அமைதி படையை அனுப்பி வைக்கிறது ஐ.நா. அமைப்பு. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1.20 லட்சம் வீரர்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அமைதி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைய நிலையில், காங்கோ, ஹைதி, போஸ்னியா என 16 நாடுகளில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இந்த வீரர்கள் மீதுதான் பாலியல், பெண்களை கடத்தி விபச்சாரத்துக்கு விற்பனை செய்வது, போதை கடத்தல் உள்ளிட்ட புகார்கள் பாய்ந்துள்ளன. இப்படி தவறு செய்யும் வீரர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிடுகிறது ஐ.நா. அதுதான் தண்டனை. வேறு எதுவும் கிடையாது.

ஐவரி கோஸ்ட்டில் பெனின் நாட்டு வீரர்கள் உணவு பொருட்களை கொடுத்து ஏழை பெண்களை தங்கள் செக்ஸ் ஆசைக்கு பயன்படுத்தியதை சேவ் த சில்ரன் என்ற தொண்டு அமைப்பு ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது. ஓராண்டு¢க்கு பிறகு அந்த வீரர்கள் அவர்கள் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதேபோல் 2007ல் சிறுமிகளை செக்ஸ் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து, ஹைதியில் பணியில் இருந்த 100க்கும் மேற்பட்ட இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

பாலியல் புகாரை தவிர்க்க பல வீரர்கள் சிறுமிகளுக்கு ஒரு டாலர் பணம் கொடுத்து செக்ஸ் வைத்துக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. ஆனால் வீரர்கள் மீது பாலியல் புகார்கள் குறைந்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. 2007ல் 108 புகார்கள். 2008ல் 85, 09ல் 63, 10ல் 33 தான் என பட்டியலிட்டுள்ளது. பல நாடுகள் ஐ.நா. படைக்கு வீரர்களை அனுப்புவதை லாபம் கொழிக்கும் தொழிலாகவே செய்து வருகின்றன. காரணம் ஒரு வீரருக்கு மாதம் 1024 டாலர் சம்பளம் தரப்படுகிறது. அதனால் நாடுகளும் வீரர்கள் மீதான புகார்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. காசு கண்ணை மறைத்து விடுகிறது.

...............................

1 comment:

  1. They are the product of UN.UN is almost the king of the world,an English proverb says "king do no wrong"

    ReplyDelete