Wednesday, September 7, 2011

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் உதட்டளவில் மட்டுமே .

அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் உதட்டளவில் மட்டுமே ஆதரவைத் தெரிவித்தன என்று "விக்கிலீக்ஸ்' இணையத்தளம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பணியாற்றிய அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி "விக்கிலீக்ஸ்' வெளியிட்டிருக்கும் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழக அரசியல் கட்சிகள் வெறும் வார்த்தைகளால் மட்டுமே தங்களது கண்டனத்தைத் தெரிவித்தன. இலங்கைத் தமிழர்களுக்காக அந்தக் கட்சிகள் தெரிவித்த ஆதரவும் உதட்டளவில் மட்டுமே இருந்தது என்று 2006 இல் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரக கான்சல் ஜென ரலாகப் பணியாற்றிய டேவிட் ஹூப்பர் கூறியுள்ளார்.

2007 நவம்பர் 20 இல் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் வோஷிங்டனுக்கு அனுப்பிய மற்றொரு தகவலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பான விவகாரத்தில் கருணாநிதி சாதுர்யமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். கட்சித் தொண்டர்களையும், காங்கிரசையும் சமாதானப்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான அவரது கோரிக்கைகள், வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே, அவர் உதட்டளவில் மட்டுமே பேசினார். மேலும் அவர் இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாகப் பேசினாலும், அவர்களுக்காக மத்திய அரசை எவ்விதத்திலும் நிர்ப்பந்திக்கவில்லை என்று வோஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்களில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்கள் கருத்துப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள மற்றுமொரு செய்தியில் கடந்த 2009 ஆம் ஆண்டில், மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக, சோனியா பிரதமராக வேண்டும் என தி.மு.க. விரும்பியதாக கூறியுள்ளது. இது குறித்து மேலும் கூறப்படுவதாவது,

கடந்த 2008 ஜூனில், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி டென்னிஸ் டி.ஹூப்பருடன் பேசிய, தி.மு.க.,தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான சிவபிரகாசம் என்பவர், "காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரத்தில் தி.மு.க. ஒரு போதும் தலையிடாது. இருந்தாலும், 2009 ஆம் ஆண்டில் மன்மோகன் சிங்கை விட, சோனியாவே பிரதமராக வேண்டும் என்பதில் தி.மு.க. விருப்பம் கொண்டிருந்தது. அதையே தமிழக மக்களும் விரும்பினார்கள்.

அதே நேரத்தில், பிரதமர் பதவியை ஏற்க, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலும் விரும்பவில்லை. கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, பிரச்சினைகளைத் தீர்ப்பதில் வல்லவர் என்றாலும், அவர் பிரதமராக வேண்டும் என வடமாநிலத்தவர் வேண்டுமானால் விரும்பலாம். ஆனால் தென் மாநில மக்கள் அவரை விரும்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னையில், ஒரு காலகட்டத்தில் சந்தித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கும், தான் பிரதமராக தி.மு.க. ஆதரவு தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment