Wednesday, September 7, 2011

கொழும்பில் 65280 வீடுகளை உடைப்பதற்கு அரசு உத்தேசித்துள்ளதுஎன்கிறார் ரவி கருணாநாயக்க.

சுவர்ணவாகினியின் ரத்துஹிர நிகழ்சியில் அமைச்சர் பந்துல குணவர்த்தனவுடனனான நேரடி விவாதத்தில் பா.உ ரவி கருணாநாயக்க.
அரசாங்கம் கொழும்பில் 65280 வீடுகளை உடைப்பதற்கு உத்தேசித்துள்ளது. கொழும்பில் வீடுகளை உடைப்பதற்கு முன்பாக வீடுகளை கட்டிக் கொடுங்கள் என்று ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க குறிப்பிட்டார். சுவர்ணவாஹினியில் நேற்று இரவு இடம் பெற்ற 'ரத்துஹிர' அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.

இந்த விவாத நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அவரோடு கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க விவாத்தில் கருத்து தெரிவிக்கையில், எரிபொருள் விலைகள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் நாளுக்குநாள் அதிகரித்து செல்கின்றன. மக்கள் பொருளாதார சுமையால் வாடிக் கொண்டிருக்கின்றனர். கொழும்பில் விற்பனை செய்யப்பட்டுள்ள காணிகள் எமது ஆட்சியில் மீளப் பெறப்படும். உடைக்கப்பட்டுள்ள வீட்டுரிமையாளர்களுக்கு எமது வெற்றியின் பின்னர் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

அமெரிக்கப் பிரஜை ஒருவரே கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரால் நிருத்தப்பட்டுள்ளார். கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிடும் மிலிந்த மொரகொடவை எமது மேயர் வேட்பாளர் ஏ.ஜே.எம். முஸம்மிலுடன் தொலைக்காட்சியில் நேரக்கு நேர் விவாதத்திற்கு வருமாறு அழைக்கிறேன்.

அமைச்சர் பந்துல குணவர்தன

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன விவாதத்தில் கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பில் மட்டுமன்றி காலி, மாத்தறையிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வீதி அபிவிருத்தி வேலைகள், வடிகான் மற்றும் கழிவகற்றும் வேலைத்திட்டங்கள் உட்பட பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நகரங்கள் அழகுபடுத்தப்படுகின்றன.

கொழும்பில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு தொடர்மாடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படவுள்ளன. அந்த மக்கள் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படவுள்ளது.

எமது நாடு பெற்றோல் உற்பத்தி செய்யும் நாடல்ல. பெற்றோலின் விலையை எம்மால் தீர்மானிக்க முடியாது.

கொழும்பு நகரம் சிறிய ஒரு மழை பெய்தால்கூட நீரில் மூழ்கிவிடும். கொழும்பு நகரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

கல்வியினூடாக உல்லாசப் பயணத்துறையை வளர்ச்சி அடையச் செய்யும் திட்டம் எமது நாட்டிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.

கொழும்பு நகர மக்களுக்கு நல்லதொரு சேவையை செய்யக் கூடிய வேட்பாளர் ஒருவரே மேயர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment