Saturday, November 27, 2010

சீனா-இலங்கை உறவு வலுப்பட்டாலும், இந்தியா- இலங்கை உறவில் எந்த பாதிப்புப் கிடையாது.

1800 கோடி கடனுதவி.
இந்திய வெளிவிவகார அமைச்சரும் பாக்கிஸ்தான் ஜனாதிபதியும் தற்போது இலங்கையில் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இலங்கைவந்த இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அயலுறவுச் செயலர் நிரூபமா ராவ் ஆகியோர் நேற்றுக்காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசினர். சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிருஷ்ணா சீனா-இலங்கை உறவு வலுப்பட்டாலும், இந்தியா-இலங்கை உறவில் எந்த பாதிப்பும் கிடையாது என தெரிவித்துள்ளார்:

சந்திப்பின் பின்னர் இரு நாடுகளின் கூட்டு ஆணையத்தின் 7வது சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது மகிந்த ராஜபக்ச, கிருஷ்ணா, இலங்கை அயலுறவு அமைச்சர் ஜீ.எல் பீரீஸ் ஆகியோர் முன்னிலையில் இலங்கையின் இரயில் திட்டங்களுக்கு உதவும் கடனுதவி (லைன் ஆஃப் கிரெடிட்) ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்ஒப்பந்தத்தில் இலங்கையின் வடக்குப் பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள மூன்று இரயில் பாதை அமைப்புத் திட்டங்களுக்கு இந்தியா 416 மில்லியன் டாலர் (ரூ.1,800 கோடி) கடனுதவி அளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

ஓமந்தையிலிருந்து பல்லை, மடு சாலையில் இருந்து தலைமன்னார், மதவாச்சியிலிருந்து மடு சாலை ஆகிய மூன்று இரயில் திட்டங்களுக்கு இந்த கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.

தென் இலங்கையில் மாத்தளையில் இருந்து கொழும்பு வரை இரயில் பாதை அமைக்க ஏற்கனவே ரூ.800 கோடி (167.40 மில்லியன் டாலர்) கடனுதவியை இந்தியா அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திட்டத்தின் வளர்ச்சி குறித்தும் ஆராயப்பட்டதாக இலங்கை அரசு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, கிழக்குப் பகுதியில் உள்ள சம்பூரில் கப்பல் துறை கட்டவும், சம்பூரில் இந்தியாவின் நிதியுதவிடன் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்திலிருந்து மின்சாரத்தை ஹபரன கொண்டு செல்ல மின் கடத்திக் கம்பி அமைக்கவும் மேலும் 200 மில்லியன் டாலர் (ரூ.900 கோடி) கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டதற்குப் பிறகு வர்த்தக அளிவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் போடுவது ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டதாக இலங்கை அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், இடம்பெயர்ந்த மக்களை மீழ் குடியமர்த்தல், மறுவாழ்வு, வீடு கட்டித்தருதல், அரசியல் அதிகாரப் பகிர்வு ஆகியன குறித்து அந்த அறிக்கையில் எவ்வித விடயங்களும் குறிப்படப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்புpடத்தக்கதாகும்.

நேற்றுக்காலை ஜனாதிபதியை சந்தித்தபின்னர் , இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்

'இலங்கையில், வௌ;வேறு மொழி பேசும் மக்களுக்கு (தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும்) இடையிலான பல பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன. அவற்றை தீர்த்துவைப்பதற்கு இலங்கை அரசுக்கு இப்போது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பு கிடைத்து உள்ளது. சரியான புரிந்துணர்வுடனும், ஒத்துழைப்புடனும் அது நிறைவேறும் என்று நம்புகிறோம்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை விரைவில் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தி, அவர்களது மறுவாழ்வு பணிகளை துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண வேண்டும் என்றும் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி வலியுறுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற முறையில், இந்த பிரச்சினையில் கருணாநிதியின் கவலை மிகவும் நியாயமானது. அவருடைய இந்த கோரிக்கையை இலங்கை அரசு உன்னிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன்.

இலங்கை அரசும் முகாம்களில் இருந்த பெரும்பாலான தமிழர்களை அவர்களின் சொந்த ஊர்களில் குடியமர்த்திவிட்டது. 17 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் மட்டுமே தற்போது முகாம்களில் இருக்கிறார்கள். அவர்களும் விரைவில் சொந்த ஊர்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியா-இலங்கை இடையே நல்லுறவை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். சீனா-இலங்கை இடையே உறவு வலுப்பட்டாலும், இந்தியா-இலங்கை உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

2008-ம் ஆண்டு இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, தமிழக மீனவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்.

கொழும்பில் இருந்து தமிழ்நாட்டில் துறைமுக நகரான தூத்துக்குடி, தலைமன்னார் மற்றும் ராமேசுவரம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.'' என தெரிவித்துள்ளார்:

அதேநேரதம் இன்று காலை யாழ்பாணத்தில் இந்தியாவிற்கான துணைத் தூதரகம் ஒன்றினை திறந்து வைத்துள்ள எஸ் எம் கிருஷ்ணா : ஹம்பாந்தோட்டையிலும் இந்திய துணைத்தூதரகம் ஒன்றை திறந்து வைக்கவுள்ளார். இந்நிகழ்வில் அமைச்சர்களான ஜீஎல் பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா மற்றும் பசில் ராஜபக்ஸ மற்றும் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தாஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

1 comments :

Anonymous ,  December 7, 2010 at 7:48 PM  

very good information you write it very clean. I'm very lucky to get this information from

you.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com