Saturday, September 18, 2010

நல்லிணக்க ஆணைக்குழு கிளிநொச்சியில் கூடுகின்றது. ஊடகங்களுக்கு தடை இல்லையாம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கடந்த கால பாடங்களை கற்றுக்கொள்ளலம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இன்று கிளிநொச்சியில் கூடவுள்ளது. இன்றும், நாளையும், கிளிநொச்சியில் விசாரணைகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 20 ஆம் திகதி முல்லைத்தீவிலும் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு ஊடகங்களுக்கு சுதந்திரமாக அனுமதி அளிக்கப்படவில்லை என பிபிசி குற்றஞ்சுமத்தியுள்ள நிலையில் பிபிசி ஊடகத்திற்கோ, வேறு ஊடகங்களுக்கோ நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் கலந்து கொள்ள தடைவிதிக்கவில்லை என நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாம் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒருங்கமைப்பு செயலாளர் ஏ.ஜி.குணவர்த்தன அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில் எந்த ஊடகமும் நல்லிணக்குழுவின் ஆணைக்குழுவின் சாட்சியமளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம் எனவும் அவர்களை வரவேற்பதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலைய ஆணையாளர் லக்ஷ்மன் உலுகல்ல அததெரணவிற்கு தெரிவிக்கையில் , ஊடகங்களுக்கு எதுவித தடையும் விதிக்கபடவில்லை எனவும் தேவையாயின் நேரில்சென்று அதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment