Tuesday, August 31, 2010

நோயாளியுடன் பேசிக்கொண்டே மூளை அறுவை சிகிச்சை.

அறுவை சிகிச்சை என்றாலே அச்சம் இருக்கவே செய்யும். ஆனால் பெங்களூரைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், நோயாளி விழித்திருக்கச் செய்து அவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மிதுன் சத்தூர்.

இவரிடம் சிகிச்சை பெற வந்த நாற்பது வயதான ஷன்முக் கல்பர்கி என்பவருக்கு மூளைக்கு மிக அருகில் கட்டி ஒன்று வளர்ந்திருந்தது. மனிதனின் பேச்சு, வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும் திறன் ஆகியவற்றைக் கையாள்வது மூளையின் இடப்புறம்தான். ஷன்முக்கிற்கு மூளையின் இடப்புறத்தில்தான் அக்கட்டி வளர்ந்திருந்தது. எனவே இக்கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யத் தீர்மானித்தார் மிதுன் சத்தூர்.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி ஷன்முக் கல்பர்கிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையின்போது ஷன்முக்கிற்கு மயக்க மருந்து எதுவும் செலுத்தப் படவில்லை. அறுவை சிகிச்சை நடந்து முடியும் வரையில் மருத்துவர் களுடன் பேசியபடியே இருந்தார் ஷன்முக்.

“மூளையின் இடப்புறம் பாதிக்கப்பட்டால் ஒருவர் பேச்சுத்திறனை இழக்க நேரிடலாம். சில சமயங்களில் வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்க இயலாது போகவும் நேரிடும்.

சிகிச்சைக்குப் பின்னர் இத்தகைய சிக்கல்கள் ஏற்பட்டால் குணப் படுத்துவது கடினம். அதனால்தான் சிகிச்சையின்போது ஷன்முக்குடன் பேசியபடி இருந்தோம். அவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அதைச் சரி செய்யவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.

“ஷன் முக் தற்போது நலமாக இருக்கிறார்,” என்றார் டாக்டர் மிதுன்.

No comments:

Post a Comment