Tuesday, August 3, 2010

ஆப்கானுக்கு யு.எஸ். படை சென்றது தவறு: அமெரிக்கர்கள் கருத்து.

ஈராக்கில் ஆக.31 முதல் அமெரிக்கப் படை தாக்குதல் நிறுத்தம்.
ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா தனது படைகளை அனுப்பி தவறிழைத்துவிட்டதாக அந்நாட்டைச் சேர்ந்த 43 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவிடம் ஏராளமான நிதி மற்றும் இராணுவ உதவிகளை பெற்றுக்கொண்டே மறுபுறம், ஆப்கானிஸ்தானிலுள்ள தாலிபான் தீவிரவாதிகள் அமெரிக்க படையினரை எதிர்த்து போரிட பாகிஸ்தான் உதவி வந்ததை, "விக்கிலீக்ஸ்" இணைய தளம் அண்மையில் அம்பலப்படுத்தியது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா தனது படைகளை அனுப்பி தவறிழைத்துவிட்டதாக அந்நாட்டைச் சேர்ந்த 43 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

அதே சமயம் தாலிபான்களுக்கு பாகிஸ்தான் உதவுவது மற்றும் அமெரிக்க இராணுவத்தின் செயல்பாடுகள் குறித்த இரகசிய ஆவணங்களை "விக்கிலீக்ஸ்" இணைய தளம் பகிரங்கப்படுத்தியிருக்கக்கூடாது என்று 66 விழுக்காடு அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 25 விழுக்காட்டினர் மட்டுமே அதனை வெளியிட்டது சரி என்று கூறியுள்ளனர்.

அதேநேரம் இம்மாதம் 31 ம் தேதி முதல் ஈராக்கில் தாக்குதல் நடத்துவதை அமெரிக்கப் படையினர் நிறுத்திக்கொள்வார்கள் என அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில், ஈராக் போரில் பங்கேற்று ஊனமடைந்த அமெரிக்கப் படையினரிடையே உரையாற்றுகையில், ஒபாமா இத்தகவலை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ஈராக்கில் வரும் 31 ஆம் தேதி முதல் அமெரிக்கப் படைகள் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிடாது. அந்தப் பணியை ஈராக் படைகளிடமே ஒப்படைக்கவுள்ளோம் என்றும், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றவுடன், ஈராக்கிலிருந்து 50,000 படையினரை வாபஸ் பெற்ற நிலையில்,தற்போது அங்கு 65,000 அமெரிக்கப் படையினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment