Wednesday, July 7, 2010

அரசின் அனுசரணையிலேயே ஐ.நா விற்கு எதிரான ஆர்ப்பாட்டம். IGP மீது கோத்தா ஆத்திரம்.

ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் க்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட குழுவை கலைக்குமாறு விமல் வீரவன்ச வினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் அரசின் அனுசரணையுடனேயே இடம்பெற்று வருகின்றது என லங்காறுத் எனப்படும் ஜேவிபி சார்பு இணையத்தளம் தெரிவிக்கின்றது.

அவ்விணையம் தனது செய்திக்கு ஆதாரமாக ஒலிப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட ஒலிப்பதிவில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச , ஆர்பாட்டக்காரர்களை அவ்விடத்திலிருந்து கலைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரியை தாறுமாறாக பேசி அவ்விடத்திலிருந்து சகல பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் வாபஸ் பெறுமாறு உத்தரவிடுகின்றமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களை நெருங்கிச்சென்ற பொலிஸ் அதிகாரிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் வலுப்பெறுகின்றது. அவர் தனது உயரதிகாரி ஒருவருடன் மேலதிக ஆலோசனைக்காக தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது அங்கே அமைச்சர் விமல் வீரவன்ச வருகின்றார். பாதுகாப்பு அமைச்சின் செயலர் உங்களிடம் பேசவேண்டுமாம் என பொலிஸ் அதிகாரியிடம் தனது தொலைபேசியை கொடுக்கின்றார். மறு முனையில் இணைப்பிலிருந்த உயரதிகாரியிடம் SIR, பாதுகாப்பு செயலர் பேசவேண்டமாம் என தொலை பேசியை நீட்டுகிறார் அமைச்சர் விமல் வீரவன்ச என கூறி இணைப்பை துண்டித்துவிட்டு விமல் வீரவன்சவின் தொலைபேசியை வாங்கி

Sir என்கின்றார்.

உங்களை அத்தப்பக்கம் செல்லவேண்டாம் என உத்தரவிட்டிருந்தும் ஏன் அங்கு சென்றீர்கள் ?

Sir பொலிஸ் மா அதிபர் சொல்லித்தான் இங்கு வந்தோம் என பொலிஸ் அதிகாரி கூறுகின்றார்.

அவ்விடத்தில் ஒரு பொலிஸாரைக் கூட விடாமல் அழைத்துச் செல்லும்படி கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது.

அப்படியே செய்கின்றேன் Sir என பொலிஸ் அதிகாரி கூறுகின்றார்.

இதனூடாக இவ்வார்ப்பாட்டம் அரசின் அனுசரனையுடனேயே இடம்பெற்றுள்ளது என நிருபனமாகியுள்ளதாக லங்காறுத் இணையம் தெரிவிக்கின்றது. இத்தொலைபேசி உரையாடல் அங்கு நின்ற ஊடகவியலாளர் ஒருவரால் பதிவு செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.

எவ்வாறாயினும் தனிநபர் ஓருவரின் பிரத்தியேக உரையாடல் அவரது ஒப்புதல் இன்றி பதிவு செய்யப்படுதல் தண்டனைக்குரிய குற்றமாகும். எதிர்காலத்தில் இதை பதிவு செய்த ஊடகவியலாளர் மற்றும் அதனை முதலில் பிரசுரம் செய்த ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் சந்தர்ப்பங்கள் உண்டு.

No comments:

Post a Comment