Monday, July 5, 2010

திருமணமான 10 நாளில் புதுப்பெண்ணின் காதலன் சரமாரி வெட்டிக் கொலை.

இந்தியாவில் மானாமதுரை அருகே உள்ள புதுக்குளத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது27), டிரைவர் இவரும் கட்டிக்குளத்தை சேர்ந்த விஜயன் மகள் மேகலா(19)வும் காதலித்தனர். இவர்களின் காதலுக்கு விஜயன் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் மேகலா தனது காதலில் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து விஜயன் தனது மகளுக்கு உடனடியாக வேறு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார். அதே ஊரை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 1.6.2010 அன்று மேகலாவை திருமணம் செய்து கொடுத்தார். ஆனாலும் மேகலாவால் தனது காதலனை மறக்க முடியவில்லை. எப்போதும் அவர் நினைவாகவே இருந்து வந்தார்.

இந்த நிலையில் மேகலாவும் சிவக்குமாரும் தனிமையில் சந்தித்து நாம் வேறு எங்கேயாவது சென்றுவிடலாம் என முடிவு செய்தனர். அதன்படி திருமணம் முடிந்து 10 நாட்கள் கழித்து மேகலா சிவக்குமாருடன் ஓட்டம் பிடித்தார். தனது மகள் வேறு ஒருவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்த பிறகும் காதலனுடன் சென்றுவிட்டாளே என விஜயன் ஆத்திரம் அடைந்தார். தனது மகள் மற்றும் காதலன் சிவக்குமாரை தேடி கண்டுபிடிக்க முடிவு செய்தார்.

இந்த நிலையில் அவர்கள் புதுக்கோட்டையில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து விஜயன் மற்றும் உறவினர்கள் மேகலாவுடன் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களை சேர்த்து வைக்கிறோம். நீங்கள் கட்டிக்குளத்திற்கு வந்து வீடு எடுத்து தங்க ஏற்பாடு செய்கிறோம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர்.

இதனை நம்பி காதல் ஜோடி மேகலா, சிவக்குமார் இருவரும் புறப்பட தயாரானார்கள். விஜயன் மற்றும் உறவினர்கள் அவர்களை நேற்று நள்ளிரவு பஸ்சில் மானாமதுரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் கட்டிக்குளம் வந்தனர்.

தனது மகள் ஓடிப்போனதில் ஆத்திரத்தில் இருந்த விஜயன் திடீரென ஆவேசம் அடைந்து சிவக்குமாரை தரையில் தள்ளி தரதரவென இழுத்து அடித்து உதைத்தார். மேலும் அரிவாளால் அவரது கழுத்தை ஆடு அறுப்பதுபோல் அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சிவக்குமார் சரிந்தார். இதிலும் ஆத்திரம் அடங்காத விஜயன் மற்றும் உறவினர்கள் சிவக்குமாரின் உடலை துண்டு, துண்டாக வெட்டினர். தனது காதலன் தன் கண்முன் வெட்டப்படுவதை கண்டு அலறித்துடித்த மேகலாவையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. மேகலாவையும் சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதையடுத்து அங்கிருந்து விஜயன் மற்றும் உறவினர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் மேகலாவை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்ததும் மானாமதுரை போலீசார் விரைந்து வந்து சிவக்குமார் பிணத்தை கைற்பற்றி பிரேத பரிசோதனைக்காக மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விஜயன் உள்பட உறவினர்கள் 10 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com