Sunday, June 20, 2010

கிளிநொச்சியில் ஐ.நா அலுவலகம்

போர்வேளையில் வன்னிக்கு உணவு எடுத்துச் சென்ற ஐ.நா வாகனம் ஒன்று(ஆவணப்படம்) விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அவர்களின் அரசியல் தலைநகரமாக கருதப்பட்ட கிளிநொச்சி நகரப்பகுதியில் ஐ.நா அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

பேரழிவுக்கு உள்ளாகிய இந்த நகரப்பகுதியிலும் அதன் மாவட்டத்திலும் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருவதையடுத்து பல்வேறு அரச அலுவலகங்களும் சர்வதேச நிறுவனங்களின் அலுவலகங்களும் அங்கு செயற்பட முன்வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே, மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்து வருகின்ற ஐநா சபையின் முக்கிய அலுவலகங்களும் அங்கு திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.

மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கான நிவாரண உணவுப் பொருட்களை பங்கீட்டு அடிப்படையில் இலவசமாக வழங்கி வருகின்ற உலக உணவுத் திட்டம், உணவு மற்றும் விவசாய நிறுவனம், குழந்தைகளின் நலன்களுக்கான ஐநாவின் சிறுவர் நிதியம் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கிய ஐ.நாவின் அலவலகமே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டிருப்பதாக ஐ.நாவின் பேச்சாளர் ஒருவர் கூறியிருக்கின்றார்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கடும் மோதல்களையடுத்து, அங்கு செயற்பட்டு வந்த ஐநாவின் அலுவலகங்கள் மூடப்பட்டதாகவும், அந்த அலுவலகங்கள் இப்போது திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com