Friday, June 25, 2010

திராவிடரா? தமிழரா? எது நமது அடையாளம்? தமிழகத்தில் துவங்கியுள்ள விவாதம்

தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா? என்ற கேள்விக் கணையுடன் வரலாற்று, அரசியல் ரீதியிலான ஒரு விவாதம் சூடாகக் கிளம்பியுள்ளது. கோவையில் தமிழக அரசால் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அம்மாநாடு குறித்து முரசொலியில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு,கருணாநிதி எழுதிய கடிதம் மற்ற நாளிதழ்களில் திமுக, தலைமைக் கழகத்தால் விளம்பரமாக அளிக்கப்பட்டுள்ளது. அதில், “திராவிடத்தை, திராவிடர் நாகரீகத்தை, அவர் தம் கலையை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, தென்னகப் பலாக்கனியான் - திராவிடத்தில் குலுங்கிடும் இனிய தமிழ்ச் சுளைகளை; ஆம், இலக்கியச் சுளைகளை...” என்று எழுதியுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்க, அதுவே தமிழரின் அடையாளம் எது? திராவிடரா? தமிழரா? என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் துவக்கப்பட்டுள்ள இந்த விவாதம் சென்னை, தியாகராயர் நகரிலுள்ள செ.தெ.நாயகம் மேனிலைப் பள்ளி மைதானத்தில் திங்கட்கிழமை மாலை ஒரு கருத்தரங்கமாக துவங்கி நடைபெற்றது.

கருத்தரங்கின் முதல் பேச்சாளராக வந்த தமிழ்த் திரைப்பட இயக்குனர் புகழேந்தி, தமிழர் என்று சொல்லின் மருவே திராவிடர் ஆனது என்பதை தேவநேயப் பாவாணர் உறுதி செய்துள்ளதை எடுத்துக் கூறி, ஒரு மருவு எப்படி தொன்மையான தமிழினத்தின் அடையாளம் ஆகும் என்று கேள்வி எழுப்பினார்.

தனது கடிதத்தில் திராவிடர், திராவிடம் என்று கூறி அடையாளப்படுத்த முயற்சிக்கும் தமிழக முதல்வர், திராவிடத்தின் அங்கமாகவுள்ள கருநாடகத்திலோ அல்லது ஆந்திரத்திலோ தேர்தலில் நிற்கத் தயாரா என்று கேட்டது மட்டுமின்றி, தனது அடையாளம் என்ன, தன்னை திராவிடர் என்கிறாரா அல்லது தமிழர் என்கிறாரா என்பதை முதலில் கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

தமிழர் என்ற உணர்வு இல்லாத காரணத்தால்தான், தமிழ் மொழியை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவிட்டு, அதனை நடைமுறைக்கு கொண்டு வர அனுமதி பெற எந்த முயற்சியும் தமிழக முதல்வர் எடுக்கவில்லை என்று குற்றம் சாற்றினார்.

தமிழ் மொழியின் வளமையை ஆய்வு செய்த அறிஞர் பலர், அதிலிருந்து பிறந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள தமிழ் சொற்களை நீக்கிவிட்டால் அந்த மொழிகளே இருக்காது என்று கூறியதைச் சுட்டிக்காட்டிய தமிழக அரசின் முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், தமிழ் மொழியில் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கினால் அது மேலும் சிறப்புப் பெறும் என்று கூறினார்.

திராவிடர் என்ற சொல் தமிழ் இலக்கியம் எதிலும் இல்லாத ஒரு வார்த்தை என்று கூறிய தமிழறிஞர் அருகோ, அது தாயுமானவர் பாடிய பாடல் ஒன்றில் மட்டும், அதுவும் எதிர்மறைப் பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளதை பாடிக்காட்டினார்.

செம்மொழி என்று கூறுவதால் தமிழிற்கு பெருமை ஏதுமில்லை என்றும், இப்போது தெலுங்கு, கன்னட மொழிகளையும் செம்மொழி என்று மத்திய அரசின் பண்பாட்டுத் துறை அமைச்சர் அம்பிகா சோனி அறிவிக்க உள்ளார் என்றும் அருகோ கூறினார்.

“நாம் மொழியாலும், மரபாலும், தேசியத்தாலும் தமிழரே” என்று அருகோ கூறினார்.

தமிழ் மொழிச் சொற்களே வடமொழியில் உள்ள பெரும்பான்மை சொற்கள் என்று கூறி தனது உரையைத் துவக்கிய தமிழறிஞர் பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா, மாலையை குறிப்பிட, சூரியன் மேற்கில் சாயும் பொருள்பட நாம் கூறும் சாயங்காலம் என்றத் தமிழ்ச் சொல் சாய்ங்கால் என்றும், புவியைக் குறிப்பிட தமிழில் உள்ள பழவி என்ற சொலை பிருத்வி என்றும், பவழம் என்ற சொல் பிரவாகம் என்றும், படி என்ற சொல் பிரதி என்றும், தமிழ் மொழிச் சொற்கள் அவர்கள் வாயில் நுழையாத காரணத்தால் ஒலி மாறி வடமொழியாக புழங்கிவருவதைச் சுட்டிக்காட்டினார்.

வடமொழி என்று கூறப்படும் சமஸ்கிருதம் எந்த ஒரு காலத்திலும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பேசப்பட்ட ஒரு மொழியல்ல என்றும், தமிழ் உட்பட வழக்கில் இருந்த பேச்சு மொழிகளில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மொழியே அது என்றும் கூறிய பேரா.தங்கப்பா, திராவிடம் என்பது பொய் என்றார்.

அப்படி ஒரு பகுதி வரலாற்றில் இல்லை என்று கூறிய பேரா. தங்கப்பா, தமிழை ஆய்வு செய்த மொழியியல் ஆய்வாளரான கால்டுவெல் தமிழையும், அதிலிருந்து பிறந்த மற்ற தென்னாட்டு மொழிகளையும் திராவிடக் குடும்பம் என்று கூறியதையும் சுட்டிக்காட்டினார்.

எனவே, மொழியால், இனத்தால், நாட்டால், பண்பாட்டால் நாம் தமிழர் என்பதே உண்மை, அது மட்டுமே நமது அடையாளம் என்று கூறினார்.

ஈழத்தில் தமிழினப் படுகொலைக்குப் பின்னர், தமிழர்களிடையே உருவாகிவரும் தமிழ்த் தேசிய உணர்வைக் கண்டு அச்சமுற்றதாலும், எங்கே அந்த வரைமுறைக்குள் தன்னால் வர முடியாதோ என்கிற அச்சத்தாலுமே திராவிடர், திராவிடம் என்றெல்லாம் கருணாநிதி பேசுவதாக தமிழக அரசின் முன்னாள் அரசவைக் கவிஞர் புலவர் புலமைப்பித்தன் கூறினார்.

“ஒரு மருந்து காலாவதியாகும் போது அது விஷமாகிறது, அதுபோலவே, திராவிடம் என்பது இப்போது பொருளற்றதாகிவிட்டது” என்று கூறிய புலமைப் பித்தன், தந்தை பெரியார் திராவிடர் என்ற சொல்லால் தமிழை மீட்டார். பெரியார் தோன்றியிருக்காவிட்டால் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்திருக்காது என்றார்.

1956ஆம் ஆண்டுவரை தமிழுக்கு திராவிடம் அரணாக இருந்தது, இன்றைக்கு அது தேவையற்றதாகிவிட்டது என்று கூறிய புலவர் புலமைப்பித்தன், தமிழர் என்ற அடையாளத்தை கண்ட பிறகு என்ன செய்யப்போகிறோம் என்பது முக்கியம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இதழாளர் கா.அய்யநாதன், ஆங்கில வரலாற்றாளர்கள் எழுதியுள்ளது போல், ஆரியப் படையெடுப்பால்தான் சிந்துவெளி நாகரீகம் அழிந்தது என்பதற்கும், வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள தஸ்யூக்கள் என்பது தமிழர்களையே குறிக்கிறது என்று கூறுவதற்கும் எந்த ஆதாரமும் இதுவரை அளிக்கப்படவில்லை என்று கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com