Wednesday, May 26, 2010

திஸ்ஸநாயகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு வாபஸ்.

தமக்கு விதிக்கப்பட்ட இருபது ஆண்டு கால கடூழியச் சிறைத்தண்டனைக்கு எதிராக ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ளும் ஆவணங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உலக ஊடக சுதந்திர தினமன்று சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. எனினும், இந்த பொது மன்னிப்பை அமுல்படுத்துவதில் சில சட்ட சிக்கல்கள் காணப்பட்டன. தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக ஊடகவியலார் திஸ்ஸநாயகம் மேன்முறையீடு செய்திருந்தார்.

மேன்முறையீட்டு உத்தியோகபூர்வமாக வாபஸ் பெற்றுக் கொள்ளும் வரையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பை அமுல்படுத்த முடியாதென அறிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி, தமது மேன்முறையீட்டை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் நீதிமன்றிற்கு சட்டத்தரணிகளின் ஊடாக அறிவித்துள்ளார்.மேன்முறையீட்டு மனு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டவுடன் பொதுமன்னிப்பு அளிக்க முடியும் என சட்ட மா அதிபர் மொஹாளன் பீரிஸ் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு பொதுமன்னிப்பு வழங்கும் செயன்முறையை துரிதப்படுத்துமாறு சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

திஸ்ஸநாயக்கத்திற்கு எப்போது பூரணமாக பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்பது தொடர்பில் ஜனாதிபதியும், சட்ட மா அதிபரும் தெளிவுபடுத்த வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com