இழப்பீடு கேட்கும் விமான நிறுவனங்கள்.
ஐஸ்லாந்து எரிமலை கக்கிய சாம்பல் புகையால் ஐரோப்பிய நாடுகளில் ரத்து செய்யப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆறு நாட்களாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் விமானச் சேவை நிறுவனங்களுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இழப்புக்கு நஷ்ட ஈடு வழங்கக் கோரி ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களை விமானச் சேவை நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் இழப்புத் தொகை எவ்வளவு என்பது குறித்து கணக்கிட்டு வருகின்றனர். இந்த இழப்பை யார் நிவர்த்தி செய்வது என்பது இவர்களின் கேள்வியாக உள்ளது.
இந்நிலையில் விமான நிறுவனங்களுக்கு 1.7 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக அனைத்துலக விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. விமான நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு 400 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக அந்த சங்கம் கூறியது. சென்ற ஆண்டு பொருளியல் நெருக்கடி காரணமாக உலகில் விமானச் சேவை நிறுவனங்களுக்கு 9.4 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு மேலும் 2.8 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு எவ்வாறு இழப்பீடு வழங்குவது என்பது குறித்து அரசாங்கங்கள் ஆராய வேண்டும் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்து சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையில் ஐஸ்லாந்து எரிமலையின் சீற்றம் தணிந்து வரும் வேளையில் ஐரோப்பிய வான்வெளியை நோக்கி புதிய எரிமலைச் சாம்பல் மேகம் உருவாகி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
0 comments :
Post a Comment