பார்வை! -வம்சிகன்-
ஒற்றைப் பேனா
பல மொழி எழுதும்!
ஒற்றை நாக்கு
பல மொழி பேசும்!
வேரோடும் விழுதோடும்
விருட்சமாய் ஆகிவிடு!
தேரோடும் வீதியெனில்
ஊரோடு கூடி(விடு)யிழு!
காரமுள்ளுக் காடெல்லாம்
தடமழிந்து போகட்டும்!
ஊசிமல்லிப் பந்தல் மேலே
தென்றல் மெல்ல வீசட்டும்!
பிரிவில்லா மண் வாசம்
பேதமற்ற ஒரு தேசம்!
அறிவார்ந்த விஞ்ஞானம்
அதனுயர்வே நம் ஞானம்!
மனிதா நீ நதியாகு
மனதைக் கரையாய் உருவாக்கு!
ஓடும் வழியில் வயல் கண்டால்
ஓங்கி வளரும் பயிராகு!
கலங்கிய வன்னிக் கண்ணீரை
எதிர்காலம் விளைய உரமாக்கு!
பேதமில்லா நம் தேசம்
ஒரு தாய் பிள்ளை நம் பாசம்!
ஆதாம் ஏவாள் முதலென்றால்
உலகம் முழுதும் ஓரினமே!
புழுதியள்ளும் காற்றுக்குள்ளே
புதிதாய் மொழியைத் தேடியெடு!
அறிவியல் ஆளும் விஞ்ஞானம்
கரை வரை சேரப் பாடிவிடு!
இளைய தலைமுறை
விடியலைக் கூவட்டும்!
இலங்கைக்கென்றொரு
செய்மதி ஏவட்டும்!!
கவிதைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது VII
0 comments :
Post a Comment