Thursday, April 29, 2010

அவரசகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் எதிர்க் கட்சிகளின் பிரதான பேச்சாளராக பொன்சேகா.

கடற்படைத் தலைமையகத்தில் இராணுவப் பொலிஸாரின் தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான ஜெனரல் பொன்சேகா எதிர்வரும் மே 4,5,6 திகதிகளில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளில் அவசரகாலச் சட்ட நீடிப்பின் மீதான விவாதத்தின்போது எதிர்கட்சிகளின் பிரதான பேச்சாளராக உரையாற்றவுள்ளதாக அவரது கட்சியின் பொதுச் செயலாளர் பா.உ விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜெனரல் தனது விவாதத்தின் போது நாட்டில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பேசுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த 22ம் திகதி 7 வது பாராளுமன்றம் முதன் முறையாக கூடியபோது ஊடகவியலாளர்கள் ஜெனரல் பொன்சேகாவை சந்திப்பது தடுக்கப்பட்டிருந்ததுடன் அவரது பாராளுமன்ற பேச்சும் சில ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ள விஜித ஹேரத் இன்று அவருக்கு கிடைக்கப்பெற்றுள்ள பாராளுன்ற சிறப்புரிமைகளின் அடிப்படையில் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளின்போது அவர் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடாத்துவார் எனவும் கூறியுள்ளார்.

அதேநேரம் ஜெனரல் பொன்சேவிற்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அதே தினம் பாராளுமன்றம் கூடுகின்றது. ஜெனரல் பொன்சேகா பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் நேரச்சிக்கல்கள் தோன்றுவதால் தொடர்ந்தும் இராணுவ நீதிமன்றை நிகழ்த்துவதா? அன்றில் பிறிதொரு நாளுக்கு பிற்போடுவதா என மிகவிரைவில் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் முடிவு அறிக்கை ஒன்று மூலம் வெளியிடப்படும் எனவும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com