மலேசியா: ஆளும் கூட்டணியின் ஆதரவை நிர்ணயிக்கும் முக்கிய இடைத்தேர்தல்
இடைத்தேர்தல்களில் அடுத்தடுத்து பல தோல்விகளைச் சந்தித்துவந்த மலேசிய ஆளும் கூட்டணி, இவ்வார இறுதியில் முக்கிய இடைத்தேர்தலை எதிர்நோக்குகிறது. ஆளும் கூட்டணியின் சீர்திருத்தத் திட்டங்களுக்கான பொது வாக்கெடுப்பாக இந்த இடைத்தேர்தல் கருதப்படுகிறது.
ஆளும் தேசிய முன்னணிக்கு இடைத்தேர்தலில் வெற்றி கிடைத்தால், மலாய் முஸ்லிம்களுக்கான இன அடிப்படையிலான கொள்கைகளின் களைவு உட்பட, பிரதமர் நஜிப் ரசாக் செய்யும் சீர்திருத்தங்களைப் பொதுமக்கள் ஆதரிக்கிறார்கள் என்று கருதப்படும்.
முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான எதிர்க்கட்சியும், அன்வர் மீதான பாலியல் வழக்காலும் அரசியல் உட்பூசல்கள், கட்சித்தாவல்கள் ஆகியவற்றாலும் கட்சியின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட வில்லை என்பதை இடைத்தேர்தல் மூலம் வெளிக்காட்ட விரும்புகிறது.
சென்ற 2008ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மலேசியாவில் ஒன்பது இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் ஏழு இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சி வென்றது.
மத்திய சிலாங்கூர் மாநிலத்தின் உலு சிலாங்கூர் தொகுதியில் நடைபெற விருக்கும் இடைத்தேர்தலில் அரசாங்க ஊழியர்கள், ரப்பர் தோட்ட ஊழியர்கள், வர்த்தகர்கள் என பலதரப்பட்ட வாக்காளர்களின் ஆதரவையும் பெற ஆளும் கூட்டணியும் எதிர்க்கட்சியும் போட்டிப் போடுகின்றன.
ஆளும் கூட்டணியின் சார்பில் P.கமலநாதனும் எதிர்க்கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் சையத் இப்ராஹிமும் உலு சிலாங்கூர் தொகுதி யில் போட்டியிடுகின்றனர். ஏப்ரல் 25ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
சென்ற 2008ம் ஆண்டு பொதுத் தேர்தலில் உலு சிலாங்கூர் தொகுதியை குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வென்ற எதிர்க்கட்சி வேட்பாளர் மரணமடைந்த தால் இங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
0 comments :
Post a Comment