கிர்கிஸ்தானில் உள்நாட்டு கலவரத்தில் உள்துறை அமைச்சர் உள்பட 40 பேர் பலி:
அதிபர் வெளிநாடு தப்பியோட்டம்
கிர்கிஸ்தானில் உள்நாட்டு கலவரத்தில் அந்த நாட்டு உள்துறை அமைச்சர் உள்பட 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உள்நாட்டு கலவரம் எதிரொலியாக அதிபர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதால் ஆட்சி அதிகாரத்தை எதிர்க்கட்சிகள் கைப்பற்றியுள்ளனர். முன்னாள் சோவித் நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தான் மத்திய ஆசிய பகுதிகளில் உள்ளது. அங்கு அரசின் ஊழலை கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தலைநகர் பிஸ்கேட்டில் இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சியினர் அரங்கேற்றிய வன்முறை சம்பவங்களில் உள்துறை அமைச்சர் மோல்டோமுஸ் அடித்துக் கொல்லப்பட்டார். துணை பிரதமர் போராட்டக்காரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார்.
கிர்கிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் தொலைக்காட்சி நிலையம் போன்றவற்றையும் எதிர்க்கட்சியினர் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக பாதுகாப்பு படையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
நிலைமை மோசமானதையடுத்து உயிருக்கு பயந்து அதிபர் குல்மன்பர்க் வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டிவிட்டார். எதிர்க்கட்சியினர் தற்காலிக அரசை அமைத்துள்ளனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று வன்முறையில் ஈடுபட்டுதான் அதிபர் குல்மன்பர்க் ஆட்சியை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிர்கிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்திற்கு ரஷ்யாதான் காரணம் என்ற குற்றச்சாற்றை அந்தநாட்டு பிரதமர் விளாடிமிர் புதீன் மறுத்துள்ளார். கிர்கிஸ்தானில் வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பழைய அரசு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்று நம்புவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜே.குரோலி கூறியுள்ளார்.
விலைவாசி உயர்வு, ஊழல் போன்றவை தலைவிரித்தாடுவதால் மார்ச் மாதம் முதலே கிர்கிஸ்தானில் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment