Wednesday, March 10, 2010

ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ்: ஒபாமா முடிவு

வருகிற ஆகஸ்டு மாதம் 31-ஆம் தேதிக்குள் ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் அமெரிக்க படை வீரர்கள் வாபஸ் பெறப்படுவார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் அடுத்த ஆண்டில் முற்றிலும் திரும்ப பெறப்படுவார்கள். இருந்தாலும் ஈராக்கில் அமைதி முழுமையாக திரும்பும் வரை அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் பொதுத் தேர்தல் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அமெரிக்க படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என அதிபர் ஒபாமா அறிவித்து இருந்தார். இதற்கிடையே அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பலத்த வன்முறை சம்பவங்களுக்கு இடையே தேர்தல் நடந்தது. வன்முறையையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது ராணுவத்தை அங்கிருந்து வாபஸ் பெற முடிவு செய்துள்ளது.

ஈராக்கில் நடைபெற்ற தேர்தல் குறித்து அதிபர் பராக் ஒபாமா கருத்து தெரிவித்தார். அப்போது, பல வன்முறை சம்பவங்களுக்கு இடையே அங்கு தேர்தல் நடைபெற்றது ஒரு மைல்கல் ஆகும்.

தற்போது தேர்தல் நடைபெற்று விட்டதால் ஈராக் மக்களின் தேவைகள் முழுவதும் நிறைவேற்றப் பட்டு விட்டதாக கருதுகிறேன். எனவே அங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் அமெரிக்க படை வீரர்கள் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந்தேதிக்குள் வாபஸ் பெறப்படுவார்கள் என்றார். (டிஎன்எஸ்)

No comments:

Post a Comment