Wednesday, March 10, 2010

இலங்கை அகதிப் பெண்ணை பாலியல் வன்முறை செய்த தமிழக போலிசார்.

ஓர் நடிகை புகார் செய்யாமலே ஓர் திருட்டு வீடியாவை வைத்து, பணம் சம்பாதிக்கும் சன் டிவியோ, நக்கீரன் பத்திரிகையோ, மற்றும் தலைப்பு செய்தியாகப் போட்டு வியாபாரத்தை கூட்டும் பத்திரிகையாளர்களோ, இந்த மாதர் அமைப்புகள் என்று சொல்லும் அமைப்புகளோ இந்த அபலைப் பெண்ணிற்கு நீதிக்கு போராடுவார்களா? இல்லை ஈழத்தமிழர், ஈழத்தமிழர்.... என்று கூக்குரல் போடும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் நீதிக்கு முன் இட்டுச்சென்று தண்டனை வான்கிக்கொடுப்பார்களா?

அல்லது இன்று இலங்கை அகதிப் பெண்ணை பாலியல் வன்முறை செய்த தமிழக போலிசாரை அவ் உயர் அதிகாரிகள் விசாரித்து அவ் அவலைப்பெண்ணிற்கு நீதி சொல்வார்களா?

இந்த இலட்சணத்தில், பெண்கள் அமைப்புகள் எதுவும் இதுவரை புகார் கொடுக்கதாத நிலையில், மாதர் அமைப்புகள் எதுவும் இதுவரை புகார் கொடுக்கதாத நிலையில் நடிகை ரஞ்சிதா செய்தியை பிரபல்யப்படுத்துவது இது ஓர் அரசியல் சாயம்பூசப்பட்டதாகவே தெரிகின்ற நிலையில் அப்பாவிப் பெண்கள் என்றால் இவர்கட்கு இளிச்சவாய். அதற்கு மேலே "சர்வதேச பெண்கள் தினத்திற்கு முண்டியடித்து ஜெயலலிதா உட்பட வாழ்த்து செய்திகள்???

அதிலும் வைகோ தனது வாழ்த்து செய்தியில் சொல்கிறார், "உலகிலேயே எங்கும் நடந்திராத வீரகாவியத்தை ஈழத்துப் பெண்கள் போர்க்களத்தில் படைத்தனர். மகளிருக்கு எதிரான குற்றம் புரிவோரைக் கடும் தண்டனைக்கு ஆளாக்க வேண்டும். பெண்ணின் பெருமை சிறக்கட்டும். பெண் உரிமை வெல்லட்டும்."......இதெல்லாம் இந்தப் பேசலாம் எதற்க்காக? எம் ஈழத்துப் பெண்கள் தங்கள் நாட்டில் படும் அவலம் தெரியவில்லையோ?

அவர்களின் வாழ்த்துச் செய்திகளை வாசியுங்கள்: http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17042

சத்ய சாயிபாபாவின் மடத்தில் இறந்து யேர்மனியப் பெண் பற்றியும், பற்றைக்குள் கிடந்தது எடுக்கப்பட்ட அவரின் கைப்பை பற்றியும் என்ன நடந்தது? அதன் பின் ஒரு முறை அவரை கொல்ல சென்றவர்களை பாதுகாவலர் கைது செய்யாமல் சுட்டுக் கொன்றது ஏன்? அதற்கு விசாரணை நடந்ததா? ஏன் மூடி மறைக்கப்பட்டது?

இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்கள் (முன்னால் ஜனாதிபதி ஒருவர் கூட), போலிஸ் முக்கியஸ்தர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் அவரின் பக்தர்கள் ஆகும். ஏன், நாத்திக திராவிடத் தலைவர் கருணாநிதி அவரை சென்னையில் வரவேற்றது............... பணமும், செல்வாக்கும், அரசியலும் பத்தும் என்ன..... நூறும், ஆயிரமும் செய்யும்.

"ஸ்ரீசத்திய சாயி சேவா அமைப்பு மூலம் சுமார் ரூ.200 கோடி செலவில் கால்வாய் பலப்படுத்தப்பட்டது. பூண்டிக்கு வரும் நீரின் வேகத்தை தாங்கும் அளவிற்கு கால்வாயின் கரைகள் மேம் படுத்தப்பட்டன".

"சாய்பாபாவின் முயற்சியால் சென்னை மக்களுக்கு கிருஷ்ணா நீர் கிடைத்ததையொட்டி அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் 21-ந் தேதி காலை 11 மணிக்கு சென்னை மக்கள் சார்பாக நடத்தப்படுகிறது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். விழாவில் சத்ய சாயிபாபா கலந்து கொள்கிறார்".

ஆதாரமும் சுவாரஸ்யமும்: http://idlyvadai.blogspot.com/2007/01/blog-post_17.html

http://idlyvadai.blogspot.com/2007/01/blog-post_12.html

இந்த இலட்சணத்தில் யாரோ ஓர் நடிகைக்காக இந்த சன் டிவி யில் எத்தனை முக்கியத்துவம்? அதை விட ஈழப்பிரச்சனையை வைத்து வியாபாரம் செய்யும் நக்கீரன் பத்திரிகையும் நடிகை ரஞ்சிதாவை வைத்து முழு வீடியோ பார்க்க log in செய்யும்படி. மாறன் குடும்பத்தில் ஒருவரோ, அல்லது நக்கீரன் கோபால் குடும்பத்தில் ஒருவரோ இந்த நித்தியானந்தாவின் சீடராக இப்படி நடிகை ரஞ்சிதாவின் இடத்தில் இருந்தால் இவ்வளவு விளம்பரம் செய்து இருப்பார்களா?

பெண்ணியல் வாதி கனிமொழி எங்கு சென்றுவிட்டார்? அத்துடன் ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பவர். நேற்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடிய உயர் மத்திய தரப்பு மாதர் அமைப்புகள், உயர்தரப்பு மாதர் அமைப்புகள் இந்தப் பெண்ணின் நீதிக்காக குரல் கொடுப்பார்களா?

மறு பக்கத்தில், மேல்மருவத்தூரில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா மிகுந்த உற்சாகத்துடன் ஒருவார விழாவாக கொண்டாடப்பட்டது. அவரது 70வது பிறந்தநாளாகிய இன்று அவரை அலங்கரிக்கப்பட்ட மலர் அலங்கார ரதத்தில் பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். விழா சிறப்பு மலரை வெளியிட்டு அருள்தரிசனம் தந்த அடிகளாரிடம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அருளாசி பெற்றனர்.

பிப்ரவரி 13 முதல் 15 தேதிவரை நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் 5000 பேருக்கு மேல் பங்கேற்று சிகிச்சை பெற்ற மக்கள் நலப் பணியுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கின. பிப்ரவரி 25 முதல் தொடர் அன்னதானம், கலச வேள்வி பூசை, சிறப்பு பாத பூசைகள், தினசரி பல்வேறு சிறப்பு கலைநிகழ்ச்சிகள், தங்கரதத்தில் வரவேற்பு, ரூ.1கோடி மதிப்பிலான மக்கள் நலப்பணிகள், வானத்தில் வண்ணக் கதிரொளிக் காட்சிகள் என தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. .

அருளாசி மேடையில் பிறந்தநாள் விழா சிறப்பு மலரை அடிகளார் வெளியிட தமிழக விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி எம். தணிகாசலம் முதலியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து அங்கு காத்துக் கொண்டிருந்த பல்துறைப் பிரமுகர்களும், அரசு உயர் அதிகாரிகளும் ஆசி பெற்றனர்.

மேலும் அறிய: http://www.kalaikesari.com/culture/culturenews/Results.asp?key_c=54

இவருக்கும்உலகம் பூராகவும் கிளைகள் உள்ள நிலையிலும், பல ஈழத்தமிழர்கள் போட்டி போட்டு கிளைகள் (டொராண்டோவிலேயே ஒன்றில் இருந்து பிரிந்து என்று மூன்று கிளைகள்) அமைத்து வழிபடும் நிலையிலும், கூடுதலாக செவ்வாடை பெண்களையே கொண்டுள்ளதாலும் இவ் ஆன்மீக வாதி தானும் இப்பெண்ணிர்காக குரல் கொடுப்பாரா? இல்லை........ ஏன் நமக்கு வம்பு என்று விட்டுவிடுவார்கள். அப்பெண்ணின் குடும்பத்தார் என்ன நன்கொடை கொடுக்கப்போகிறார்களா?

“ராமேஸ்வரம்” திரைப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. “நந்தா”, “கன்னத்தில் முத்தமிட்டால”; அந்த வரிசையில் இன்று “ராமேஸ்வரம்”. ஈழத்தமிழரின் அகதி நிலையை எடுத்துக்காட்டும் திரைப்படமாக இந்திய இயக்குனர்களால் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் இவை. இந்த மூன்று திரைப்படங்களிலும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இந்தியர்கள் ஈழத்து அகதிகளுக்கு எந்த அளவிற்கு உதவி செய்யத் தவிக்கின்றார்கள் என்பதே.”

“நான் படித்த கட்டுரைகள், சிறுகதைகளிலில் இருந்தும், தனிப்பட்ட முறையில் கேட்டறிந்த சம்பவங்களில் இருந்தும் ராமேஸ்வரத்தில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் எந்த அடிப்படைத் தேவையும் பூர்த்தி செய்யப்படாமலும், அதே வேளை பலவிதமாக வன்முறைக்குள்ளாக்கப்பட்டும் வருகின்றார்கள் என்பதே. ஆனால் மேற்கூறப்பட்ட எந்த ஒரு திரைப்படத்திலும் அதற்கான அடையாளங்கள் எதுவும் காட்டப்படவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் அட்டூழியங்கள், வன்முறைகள், போன்றவற்றை படத்திற்குப் படம் புடம்போட்டுக் காட்டும் எந்த ஒரு இயக்குனரும் ரமேஸ்வரத்தில் ஈழத்து அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சிறிதேனும் காட்டுவதற்கு எதற்காக அஞ்சுகின்றார்கள்?”

மேலும்: http://karupu.blogspot.com/2008/04/blog-post.html

இப்படியும் ஓர் குமுறல், ஆனால் இதுதான் நிஜம். ஈழத்தமிழரை வைத்து சம்பாதிப்பவர்கள் இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழருக்கு என்ன செய்கிறார்கள்? இதற்கு மேலையும் பணத்திக்காக எத்தனையோ நடக்கிறது. பிணத்தின் மேலேயே பணம் கறப்பவர்கள்.

அதே நேரத்தில் "எந்த ஒரு மனிதப் பிறப்புக்கும் தன் சொந்த நாட்டில் வாழ்வது தான் கௌரவம், பாதுகாப்பு. ஆனால் ஈழத் தமிழனுக்கென்று ஒரு பாழ் விதி எழுதி வைத்திருக்கிறான் கடவுள் அகதிகளாக அலைய வேண்டுமென்று. சொந்த மண்ணிலேயே வாழும் உரிமையோ, தகுதியோ இல்லாதவனாக அகதியாக்கப்பட வேண்டுமென்ற கொடும் விதி எழுதியவன் எவனோ அவனை நான் மதியேன்!"

“உயிர் தப்பி ஓடி வர ஈழத் தமிழனுக்கு பரப்பளவுகள் குறைந்து கொண்டே போகிறது. ஒன்று தமிழகத்தை நோக்கி ஓடி வர வேண்டும், அல்லது இலங்கையின் கொழும்பை நோக்கி பயணிக்க முனைய வேண்டும். அகதியாக கொழும்பில் இருக்க முடியாது, அங்கே தமிழனை விரோதியாகத் தான் பார்ப்பார்களே தவிர அகதியாக புகலிடம் கொடுக்கமாட்டார்கள். ஆக..எஞ்சியிருப்பது 24 மைல் கடல் தாண்டிய தூரத்திலிருக்கும் தமிழகம் மாத்திரமே!! என்றைக்கு உயிருக்காக ஓடி வர நினைத்தோமோ அன்றைக்கே எமது நிலை அண்டிப் பிழைக்கும் நிலைக்கு வந்துவிட்டது என்று தெரிந்தே தான் அகதியாக ஓடி வருகிறோம்”.

“எங்கே தமிழன் அடித்து துரத்தப்படும் போதும் ஐயோ என்று ஓடி வருவது தமிழகத்தை நோக்கித் தான். நடுக்கடலில் உயிருக்காகத் தத்தளிக்கும் நீச்சல் தெரியாத எந்த பிறவியும் கைக்கு எந்த ஒரு பொருள் கிடைத்தாலும் அதைப் பற்றி கரையேறித் தப்பிவிடத் தான் எத்தனிக்கும். அப்படியொரு சூழ்நிலை தான் எந்த ஒரு அகதிக்கும். முதலில் உயிரைக் காப்பாற்றினால் போதும் என்ற நிலை. தவிப்பு.. ஓடி வந்து விடுகிறோம். வந்த பின் உயிர் வாழ வேண்டுமென்றால் எத்தனை இன்னல்களையும் தாங்கித் தானாக வேண்டும். எத்தனை அவமானங்களையும் சகித்துத் தானாக வேண்டும். நாம் தான் எல்லாமிழந்துவிட்டோமே? எம்மைத் திரும்பக் கட்டியெழுப்பவோ நாம் இன்னார் என்று அடையாளம் காட்டவோ இனி என்ன இருக்கிறது, உயிரைத் தவிர...? பாழாய்ப் போன வயிறும், உயிரும் இருந்து தொலைக்கிறதே... என்ன செய்வது?”

ஆனாலும்.............

“எப்போது எமக்கான சுயம் கிடைக்குமோ அப்போது தான் அகதி என்ற வார்த்தை தமிழினத்தின் வரலாற்றிலிருந்து அகற்றப்படும். கற்பனை செய்து பாருங்கள்..அகதிகளாக தமிழகம் வருவதை விட , சுதந்திரமானவர்களாக தொப்புள் கொடியுறவுகளிடம் வரும் போது ஈழத் தமிழனுக்கு எத்தகைய ஆத்ம திருப்தி கிட்டும் என்று??. அந்த சந்தோசத்தின் அளவீடு என்பதே தனித்துவமானதாயிருக்கும்.”

“எப்போது தமிழினம் தன் சொந்த மண்ணில் சுதந்திரமாக சுவாசிக்க முடியுமோ அப்போது தான் அகதி என்ற நிலைபாடு எம்மை விட்டுப் போகும்.”

“அதற்கான வழிமுறையை ஈழத் தமிழன் அமைக்க முற்பட்டால் தடைக்கல் ஏன் மற்றவர்கள் போட நினைக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு தார்மீகமான , மனிதாபிமான, உணர்வுமிகுந்தவர்கள் நியாயமான பதில் தரமுடியுமா?” என்று ஓர் அகதியின் எதிர்பார்ப்பு.

மேலும்: http://groups.google.ge/group/piravakam/msg/2b11ee3d3391b823

இதற்கு இன்று நமது தாயகத்தில் வாக்கு வேட்டைக்காக இறங்கியிருக்கும் எமது வேட்டையாளர்கள் (ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட தமிழ் வேட்டையாளர்கள்) குரல் கொடுப்பார்களா? அல்லது அரசாங்கதுடன் இணைந்து உள்ளவர்கள், ஜனாதிபதி தெரிவில் மக்களுடன் சேர்ந்து மகிழ்ச்சிக் கடலில் குளித்தவர்கள், நிருபாமாவை சந்தித்தவர்கள், நல்லிணக்க, சமூக நலத்துறை அமைச்சர்கள் குரல் கொடுத்து இவ் நம் தொப்புள் கொடியுறவுகளை அவர் தம் தொப்புள் கொடியுறவுகளிடம் சேர்ப்பார்களா? முயற்சி தன்னும் எடுப்பார்களா?

இன்று இவ் வாக்கு வேட்டையாடும், வேட்டையாளர்கள் இவர்களை தாயகம் அழைத்து மீள் குடியேற்றினால் அவ் இரண்டு இலட்ச்சத்திர்க்கும் மேற்ப்பட்ட வாக்குகளும் இவர்களுக்குத்தானே, அதைதன்னும் சிந்திக்கிறார்களா? இதைப்பற்றி பலதடவை எடுத்துக் கூறியுள்ளேன். தற்போது தமிழ் நாட்டு அரசியலை விட கேவலமாகிய அரசியலாகிவிட்டது.

குஷ்புவிற்கு, ராதிகாவிற்கு, நமீதாவிற்கு, நயன்தாராவிற்கு ஓர் பிரச்சனைஎன்றால் தமிழகமே திரண்டு எழும்!

ஏன் நம் நாட்டிலும் வசந்தம் கொண்டாடுபவர்கள் அவர்களைக் கூப்பிட்டு அரங்கேற்றி மாலைகள் , பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவார்கள். அதுமட்டுமா இதை எதோ ஈழத்தமிழரின் அடிப்படைப் பிரச்சனை எல்லாம் தீர்ந்து விட்டதாக பிரச்சாரம் செய்யும் இணையதளங்கள் வேறு. கூலிக்கு மாரடிப்பவர்களை, கவர்ச்சியை காட்டுபவர்களை இவ்வளவு பணம் செலவழித்து கூப்பிடுகிறவர்கள், ஏன் நம் தொப்புள்கொடி உறவுகளைக் கூப்பிடக்கூடாது....... முயற்ச்சிக்கக்கூடாது? அவர்களும் தமது திறமைகளை வெளிக்கொண்டுவருவார்கள் தானே! அவர்கள் உங்களுக்கு கவர்ச்சியில்லையா?

வாழ்க தமிழகம்! வாழ்க ஈழத்தமிழ் எழுச்சி!

எல்லாவற்றிக்கும் மனிதாபிமானம் வேண்டும்!

அலெக்ஸ் இரவி

No comments:

Post a Comment