Saturday, March 6, 2010

பான் கீ மூ இன் முடிவுக்கு ஜனாதிபதி எதிப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை அரசு நடத்திய யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்க மனித உரிமைக் குழு ஒன்றை ஏற்படுத்துவது என்ற ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் முடிவை சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச கடுமையாக எதிர்த்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் குறிப்பாக இருதரப்பினாலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற வேண்டுகோள் உலக மட்டத்தில் நிலவுகின்றது. ஆனால் இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

அயர்லாந்தில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், சிறிலங்க அரசு போர்க் குற்றவாளியே என்றும், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளது என்றும் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா.வின் மீது அழுத்தம் அதிகரிக்க, இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த போர்க் குற்றங்கள், தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்குவதற்கு மனித உரிமைக் குழு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளார் பான் கி மூன்.

தனது இம்முடிவை அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் தெரிவித்தார். பான் கி மூன் முடிவை கடுமையாக எதிர்த்துள்ள மகிந்த ராஜபக்ச, இப்படிப்பட்ட மனித உரிமைக் குழு தேவையற்றது என்று கூறியுள்ளார்.'சிறிலங்கா தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழுவை உருவாக்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் எடுத்துள்ள முடிவு தேவையற்றது என்று அதிபர் மகிந்த ராஜபக்ச கருதுகிறார்' என்று அதிபர் அலுவலக அறிக்கை கூறியுள்ளது.

'பெருமளவிற்கு மானிட உயிர் சேதத்தை ஏற்படுத்திய மிகப் பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கை மேற்கொண்டுவரும் நாடுகள் தொடர்பாக இப்படிப்பட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அப்படிப்பட்ட நிலையில் இப்படியொரு நிபுணர் குழு சிறிலங்காவிற்கு எதிராக அமைக்கப்படுவதை எதிர்த்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்கு சிறிலங்கா தள்ளப்படும் என்பதை அதிபர் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment