Monday, March 15, 2010

பொன்சேகா விடுதலையாவது எளிதல்ல: அனோமா

ராணுவ சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வர வேண்டும் என்றுதான் பொன்சேகா விரும்புகிறார்.​ ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதையும் அவர் உணர்ந்துள்ளார் என்று பொன்சேகாவின் மனைவி அனோமா கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனோமா, “இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் நல்லெண்ணம் கொண்டோரும் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.​

இது மனதுக்கு ஆறுதலாகவும் திருப்தியாகவும் உள்ளது.​ ஆனால் இந்த வேண்டுகோளுக்கு எல்லாம் இந்த அரசு செவிசாய்க்காது என்பது தெரியும்.​ அவர் விடுதலையாக வேண்டுமானால் சட்ட ரீதியாக மட்டுமே சாத்தியமாகும்.​ நீதித்துறை மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்” என்றார் அவர்.

பொன்சேகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி,​​ ஆள்கொணர்வு மனு ​(ஹேபியஸ் கார்பஸ்)​ தாக்கல் செய்துள்ளார் மனைவி அனோமா.

அந்த மனுவில், “பொன்சேகா ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.​ எனவே அவரை ராணுவச் சட்டத்தின் கீழ் விசாரிக்கக் கூடாது.​ சிவில் சட்டத்தின் கீழ் அவரை விசாரிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியுள்ளார்.

ஏப்ரல் 8-ம் தேதி நடைபெறும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பொன்சேகா ஜேவிபி கட்சியின் தலைமையில் உள்ள ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். அவருக்காக அவரது மனைவி அனோமா தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment