முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க இயலாது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நளினி விடுதலை குறித்து ஆராய வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் தலைமையிலான குழு அவரை முன்கூட்டியே விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 19 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து அவரது விடுதலை குறித்து ஆராய வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்துள்ள அறிக்கையில், நளினியை முன்கூட்டியே விடுக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த குழுவின் அறிக்கையை ஏற்று நளினியை விடுவிக்க இயலாது என்று கடந்த 24ஆம் தேதி அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அரசு வழக்கறிஞரின் இந்த பதிலையடுத்து நளினி விடுதலை செய்யப்படுவது தற்போது இல்லை என்பது தெரியவந்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர் தனது மகளை வளர்க்க வேண்டும் என்பதாலும், 19 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாலும் தன்னை விடுக்கமாறு கோரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நளினி விடுதலை மறுப்பு ஏன்? அரசு விளக்கம்
இராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு தற்போது ஆயுட் கைதியாக உள்ள நளினியின் சமூக, குற்றப் பின்னணியும், குற்ற நடத்தையும், தெரிந்தே குற்றத்தை செய்ய உடைந்தையாக இருந்ததும் அவருக்கு விடுதலைப் பெறும் தகுதியைத் தரவில்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.
FILEஇராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நளினி, 19 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவிட்ட தன்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நளினியின் மனுவை எதிர்த்து, அவரை விடுவிக்கக் கூடாது என்று கூறி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமியும் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில், தமிழக அரசின் நிலையென்ன என்பதைத் தெரிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கிணங்க, தமிழக அரசு வழக்கறிஞர், நளினி விடுதலைத் தொடர்பாக சிறை ஆலோசனைக் குழு அளித்த பரிந்துரையை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில், நளினி விடுதலை பெறுவதற்கான தகுதியற்றவர் என்பதற்கு 8 காரணங்களை சிறை ஆலோசனைக் குழு தமிழக அரசிற்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருந்ததாக அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
1. இராஜீவ் கொலையில் தெரிந்தே நளினியும் ஈடுபட்டுள்ளார்.
2. அவருடைய கணவர் முருகன் அதே வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தூக்கு தண்டனைக் கைதியாக உள்ளார்.
3. நளினி கல்வித் தகுதி பெற்றிருந்தும் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.
4. நளினி தான் விடுவிக்கப்பட்டால், தனது தாயுடன் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அவருடைய தாயும், சகோதரனும் சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டு, சென்னை இராயப்பேட்டை காவல் வட்டத்தில் இருந்துகொண்டு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். இராயப்பேட்டை பகுதியில் முக்கிய பிரமுகர்கள் அதிகம் வாழும், நடமாடும் பகுதியாகும். எனவே, நளினி அங்கு தங்க வைக்கப்படும் நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் வாய்ப்புள்ளது.
5. நளினியின் பின்னணி.
6. குற்றச் செயல்
ஆகியன உள்ளிட்ட 8 காரணங்களைப் பட்டியலிட்டு நளினி விடுதலைக்குத் தகுதியானவர் இல்லை என்று ஆலோசனைக் குழு அறிக்கை அனுப்பியுள்ளதாகத் தமிழக அரசு மனு கூறுகிறது.
எனவே, நளினியை விடுவிக்கக் கூடாது என்று சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு மீது - அவருடைய கோரிக்கைக்குச் சாதமாக - வழக்கு முடிந்துவிட்டது.
ஆனால், 2006ஆம் ஆண்டு, அண்ணா பிறந்த நாளையொட்டி 472 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நளினியும் விடுவிக்காதது ஏன் என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில், மற்ற ஆயுள் தண்டனைக் கைதிகள் என்ன அடிப்படையில் விடுவிக்கப்பட்டனரோ அந்த அடிப்படை நளினிக்கும் பொருந்துகிறது என்று தொடரப்பட்ட வழக்கின் மீது இன்று விசாரணை நடந்தது.
நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், கே.கே. சசிதரன் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு முன் நளினி சார்பாக மூத்த வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் வாதிட்டார்.
நளினியை விடுவிக்காததற்கு, இராஜீவ் கொலை வழக்கு மத்திய புலனாய்வுக் கழகத்தால் விசாரிக்கப்பட்டது காரணம் என்றும், எனவே அதில் தமிழக அரசு ஒன்றும் செய்வதற்கில்லை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதற்கு எதிர்வாதம் செய்த வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன், மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) பணி, புலனாய்வு செய்து, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து, வழக்கு விசாரணையில் பங்கேற்றதோடு முடிந்துவிட்டதென்றும், தண்டிக்கப்பட்ட குற்றவாளியை முன் விடுதலை செய்வதில் அதன் பங்கு ஏதுமில்லை என்றும் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தனர்.
No comments:
Post a Comment