Tuesday, February 16, 2010

கோல்டன் வைஸ் இன் கூற்று ஐ.நா வின் கூற்றல்ல. வதிவிடப் பிரதிநிதி.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பேச்சாளர் கோல்டன் வைஸ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது 40000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்திருந்தார். இக்கருத்துத் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூஹனே, கோல்டன் வைஸ் இன் கருத்து ஐக்கிய நாடுகள் சபையினை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஐ.நா வின் பொதுச் செயலாளர் அல்லது சிரேஸ்ட அதிகாரிகளினாலேயே அறிக்கைகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள அவர், இலங்கையில் யுத்தத்தின் இறுதி மாதத்தில் இடம்பெற்ற உயிரழிவுகள் ஏற்றுக்கொள்ளமுடியாதளவு அதிகமாக இருந்துள்ளது எனவும் இதற்கான காரணம் புலிகள் மக்களை பலவந்தமாக தடுத்து வைத்திருந்தமையும், அரசாங்கம் அதிபயங்கர ஆயுதங்களைப் பாவித்தமையுமே எனவும் ஐ.நா தொடர்ச்சியாக தெரிவித்து வந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், நாம் இழப்புக்களின் கணிப்பீடு ஒன்றை செய்துவருகின்றபோதும், சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக தகவல்களை அறியும் நிலைமைகள் காணப்படாமையால் எம்மிடம் இழப்பு தொடர்பாக சரியான எண்ணிக்கை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐ.நா யுத்தத்தின் பின்னர் இலங்கையின் மீள் குடியமர்வு மற்றும் மீள் கட்டுமானங்களுக்கு தன்னாலான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. Worthless statements always create confusions.UN's reply regarding Gordon Weiss's statement is a good answer to Mr GordonWeiss.Hope he would not create scenes anymore.
    Thank you.

    ReplyDelete