ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பு தொடர்பாக தெரிவித்துள்ள ரணில் விக்ரமசிங்க, இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்த நான் அவரிடம் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை கைது செய்ததற்கான பின்னணியை வினவினேன். அவருடைய விடுதலைக்கு வலியுறுத்தியபோது , அவர் மீது வழக்கு தொடரப்படவுள்ளதாகவும், அரசாங்கம் உச்ச நீதிமன்றின் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் விசாரணைகள் முடிவுற்ற பின்னரே அவர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவாரா அன்றில் விடுதலை செய்யப்படுவாரா என்பது பற்றி உறுதியாக கூறமுடியும் என ஜனாதிபதி தெரிவித்தார். விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நான் அவரைக் கேட்டுக்கொண்டுள்ளேன். அத்துடன் ஜெனரல் பொன்சேகாவைச் சென்று பார்வையிடுவதற்கும் அனுமதி கோரியுள்ளேன் எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
அதே நேரம் இச்சந்திப்பில் ஜேபிபி அதிருப்தி அடைந்துள்ளதாக தெரியவருகின்றது. ஜேவிபி சார்பு இணையத்தளம் ஒன்றில் ஜெனரல் பொன்சேகா சார்பாக ஜனாதிபதியுடன் எவரும் பேசுவதை பொன்சேகா ஏற்றுக்கொள்ளமாட்டார் என தெரிவித்துள்ளதுடன், ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்படுவதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க , ஜெனரலிடம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைச் சந்தித்து பிணக்குகளை சுலபமாக தீர்த்துக்கொள்ள முயற்சிக்குமாறு வேண்டியிருந்தாகவும் அதை ஜெனரல் முற்றாக நிராகரித்திருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment