Sunday, February 7, 2010

எதிர்கட்சிகளின் கூட்டு உடைகிறது

ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்து செயற்பட்ட எதிரணிக் கட்சிகளின் தேர்தல் கூட்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிளவுபடும் நிலை உருவாகின்றது. எதிரணிக் கட்சிகள் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதா என்பது குறித்த சர்ச்சை இடம் பெறுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.தே.க. யானைச் சின்னத்தில் போட்டியிடுவதில் மிக உறுதியாக இருக்கின்றது. ஜே.வி.பியை அடுத்த தேர்தலில் கூட்டணியில் இணைத்து கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ள ஐ.தே.க., தேர்தலுக்குப் பிறகு ஜே.வி.பி.யை சேர்த்துக் கொள்ளுவது குறித்து ஆலோசிக்கலாமெனத் தெரிவித்துள்ளது. எதிரணியின் சரத் பொன்சேகா தரப்பு அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தயார் நிலையிலிருந்தபோதும் அந்த சின்னத்திற்கு உரியவரான ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க அனுமதியளிக்க மறுத்ததையடுத்து கழுகு சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிரணியில் பிளவு

அதேவேளையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முற்றாக நிராகரித்துள்ளார். இதன் காரணமாக ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பதினான்கு கட்சிகளில் ஐந்து கட்சிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்காக பிரிந்து நின்று செயற்படுவதெனத் தீர்மானித்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜெனரல் சரத் பொன்சேகா வீட்டில் நீண்ட நேரம் இடம்பெற்ற கலந்தாலோசனையின் பின்னரே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஜெனரலின் நெருங்கிய வட்டாரங்கள் வீரகேசரி வார வெளியீட்டுக்குத் தெரிவித்தன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அமைக்கப் பட்ட அதே கூட்டணியே நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்வது. அன்னப் பறவைச் சின்னத்திலேயே தேர்தல் களத்தில் குதிப்பது, தன்னையே பிரதான வேட்பாளராக கொண்டு தேர்தலுக்கு முகங்கொடுப்பது ஆகிய மூன்று ஆலோசனைகளையும் ஜெனரல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்திருந் தார். இந்தக் கோரிக்கைகளை முற்றாக நிராகரித்த ரணில் விக்கிரமசிங்க மாற்று ஆலோசனைகளையும் முன்வைத்தார். ஆனால், ரணிலின் அனைத்து ஆலோசனைகளையும் ஜெனரல் பொன்சேகாவும் முற்றாக நிராகரித்து விட்டார்.

தானே பிரதான வேட்பாளராகக் களமிறங்குதல், யானைச் சின்னத்திலேயே தமது கட்சி ஊடாகப் போட்டியிடல், ஜெனரல் சரத் பொன் சோகாவுக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் முக்கிய பதவி யொன்றினை வழங்குவது போன்ற ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளையே ஜெனரல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.

சமரச முயற்சி தோல்வி

இவ்வாறான முரண்பாடுகளைக் களைந்து இவர்களுக்கிடையில் சமரசத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய தலைவர்கள், குறிப்பிட்ட இருதரப்பினரையும் சமரசப்படுத் தும் வகையில் கடந்த புதன், வியாழக் கிழமைக ளில் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

சரத் குழு கழுகு சின்னத்திலேயே போட்டியிட முடிவு


இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜெனரல் சரத் பொன்சேகாவின் இல்லத்தில் புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திராவின் தலைமையில் நடைபெற்ற மந்திராலோசனையில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் 14 கட்சி களில் ஐந்து கட்சிகள் எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில் ஜெனரல் சரத்பொன் சேகாவுக்கு ஆதரவாகச் செயற்படுவதென்றும் கழுகு சின்னத்தில் போட்டியிடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஐ.தே.க ஜே.வி.பி.இணைப்பு இல்லை

இது இவ்வாறிருக்க எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்குள் ஜே.வி.பி.யையும் இணைத்துக் கொண்டு போட்டியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன் வைக்கப்பட்ட ஆலோசனைகளையும் அவர் முற்றாக நிராகரித்துள்ளார். அவ்வாறு ஜே.வி.பி.யினரையும் இணைத்துக் கொள்ளும்போது அவர்களுக்கான வேட்பாளர் பட்டியலில் இட ஒதுக்கீட்டில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவருமென ரணில் தெரிவித்துள்ளார். அதுமட்டு மன்றி இரு கட்சிகளின் கொள்கை ரீதியான முரண்பாடுகளையும் அவர் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜே.வி.பி. யினை இணைத்துக் கொள்வதால் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளையும் தமது முன்னணி இழக்க நேரிடலாமெனவும் அவர் சுட்டிக்காட்டியதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தேவை ஏற்படின் ஜே.வி.பி.யையும் இணைத்து அரசொன்றினை அமைப்பது குறித்து ஆலோசிக் கலாமெனவும் ரணில் தெரிவித்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இட ஒதுக்கீட்டில்ஐ.தே.க. ஜ.ம.மு இடையில் இழுபறி


இதேவேளை ஜனநாயக மக்கள் முன்னணிக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களை பங்கிட்டுக் கொள்வதில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஜெனரல் சரத் பொன்சேகாவின் இல்லத்திலே நேற்று முன்தினமிரவு ரணில், பொன் சேகா, மனோ, ரவூப், கரு ஜயசூரிய, ரவி கருணா நாயக்க ஆகியோர் கலந்துகொண்ட பேச்சு வார்த்தைகளின் இடையில் மனோ கணேசன், ரவூப் ஹக்கிம் ஆகியோரது கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு ஆசனம் மாத்திரமே கொழும்பு மாவட்டத்தில் ஒதுக்கப்படுமென ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்தபோது அதை கோபத்துடன் இடை மறித்த மனோ கணேசன் தாம் இங்கு வந்தது ஆசனங்களை பற்றி பேசுவதற்காக இல்லை என்றும், தமது கட்சியின் பங்களிப்பு இருந்திருக்கா விட்டால் கொழும்பு மாநகரத்தின் ஐந்து தொகுதிகளிலும் ஜனாதிபதித் தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற்றிருக்க முடியாதென்றும் கூறிவிட்டு கூட்டத்திலிந்து இடை நடுவில் வெளியேறியதாக வெளிவந்த செய்தி தொடர் பில் ஜ.ம.மு தலைவர் மனோ கணேசனை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் கூறியதாவது,

இச்செய்தி உண்மையானது தான். சரத் பொன் சேகாவை தொடர்ந்தும் எமது கூட்டணியில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்று நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது,கொழும்பு மாவட்டத்தில் எமது கட்சி சார்பாக கூட்டணியிலே போட்டியிடும் வேட்பாளர் தொகை பற்றிய கருத்து பேசப்பட்டமை துரதிர்ஷ்டவசமானதாகும். இதை பேசுவதற்காக நாம் அங்கு போகவில்லை. நேற்று முன்தினம் காலை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரின் அழைப்பின் பேரில் அவரை நான் சந்தித்தபொழுது, ஜே.வி.பி.யின் வேட்பாளர்களை கூட்டணி வேட்பாளர் பட்டியலிலே உள்வாங்குவதற்கு உள்ள இயலாமையையே தாம் அவ்விதம் குறிப்பிட்டதாகவும், எமது கட்சியின் வேட்பாளர் தொகை பற்றி கருத்துக் கூறவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க என்னிடம் விளக்கி கூறினார்.

எனவே, இத்துடன் இவ்விவகாரம் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது. எனினும் சிலமணி நேரங்களுக்கு முன்னாலே நடைபெற்ற இந்த கடைசி கலந்துரையாடலின் போது ஐ.தே.க தலைவரிடம் நான் தெரிவித்த கருத்துகளை ஊடகங்களின் மூலமாக தமிழ் மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமையென எண்ணுகின்றேன்.

எமது கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி கடந்த மூன்று வருடங்களில் துரித வளர்ச் சியை கண்டுவிட்ட ஒரு தேசிய தமிழ் கட்சியாகும். எமது இன்றைய வளர்ச்சிக் கட்டத்தை ஐ.தே.க புரிந்துகொண்டு எமக்குரிய அந் தஸ்தை வழங்கவேண்டும். எதிர்வரும் தேர்தலில் நாம் நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். எனவே, நாம் இன்று ஓர் கொழும்புக் கட்சி அல்ல. ஆனால் கொழும்பு மாவட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவருக்கும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம். தலைநகர தமிழ் மக்கள் எனக்கு தொடர்ந்து வாக்களித்து, எமது கட்சிக்கு தந்துவரும் உற்சாகத்தினால்தான் இன்று நாம் நாடு முழுக்க தேசிய ரீதியாக செயற்பட முடிகின்றது.

எனவே என்னை வாழ வைக்கும் தலைநகர தமிழ் மக்களை நான் ஒருபோதும் மறந்துவிடமாட்டேன். கொழும்பிலே வாழும் இந்தியவம்சாவளி மற்றும் வடக்கு, கிழக்கு சார்ந்த அனைத்து தமிழ் மக்களும் தமிழர்கள் என்ற இன அடிப்படையில் எமது கட்சியுடன் உணர்வு பூர்வமாக அணிதிரண்டு உள்ளார்கள் என்பதை பெரும் பான்மை கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியின் சுமார் 25 உறுப்பினர்கள் தமது கட்சிக்கு துரோகம் செய்து விட்டு, ஆளுங்கட்சியுடன் இணைந்து அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளார்கள். ஐ.தே.க.வுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்று நாடாளுமன்றம் வந்த மலையக கட்சிகளும் இன்று அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் உறுதியுடன் பல்வேறு சவால்களை சந்தித்தபடி ஐ.தே.க கூட்டணியில் தொடர்ந்தும் இருந்துகொண்டி ருக்கின்றோம். இதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். எனவே ஐக்கிய தேசிய கட்சி எமக்கு கடமைப்பட்டிருக்கின்றது. அரசியல் சவால்கள் என்ற ஆற்றை கடக்கும் வரைக்கும் அண்ணன், தம்பி எனக்கூறிவிட்டு ஆற்றைக் கடந்தபின் அதாவது நாடாளுமன்ற தேர்தலின் போது நீ யாரோ நான் யாரோ என ஐ.தே.க கூறுமானால் நாம் அதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

கொழும்பு மாவட்டத்திலேயுள்ள ஒரு சில ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை இன அரசியல்வாதிகளுக்கு தமிழ் மக்களின் விருப்பு வாக்குகளின் மீது பேராசை இருக்கின்றது. எமக்கு இரண்டு இடங்களை கொடுத்துவிட்டு தமிழர்களின் மூன்றாவது விருப்பு வாக்கை கவர்ந்துகொள்வது இவர்களது முதல் திட்டம். அது சரிவராவிட்டால் தமிழ் வாக்காளர்களின் மூன்று விருப்பு வாக்குகளுக்கு எதிராக நான்கு அல்லது ஐந்து தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி எமது மக்களின் விருப்பு வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்பது இவர்களது இரண்டாவது திட்டம்.

அதாவது தமிழ் மக்களின் கட்சி வாக்குகள் யானை சின்னத்திற்கு வந்து குவிய வேண்டும். ஆனால் தமிழர்களின் விருப்பு வாக்குகள் சிதறடிக்கப்பட்டு உரிய தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடாது என்ற இந்த கபடத்தனமான இனவாத ஐ.தே.க அரசியல் வாதிகளை பற்றி எமக்கு தெரியும். தமது சுயநல நோக்கங்களுக்காக இவர்களுக்கு துணை போகும் சில தமிழர்களையும் எங்களுக்குத் தெரியும். இவர்களை இனிமேலாவது திருந்துங்கள் என நாம் கூறுகின்றோம். பல்லாயிரக் கணக்கான தமிழ் விருப்பு வாக்குகள் பெரும் பான்மை வேட்பாளர்களுக்கு கிடைக்க வேண்டும். ஆனால் ஒரு நூறு சிங்கள வாக்குகளைக்கூட இவர்களால் எங்களுக்கு பெற்றுத்தர முடியாது. இந்த ஒரு வழிப்பாதை மோசடி அரசியலுக்கு நாம் இடங்கொடுக்க மாட்டோம்.

கொழும்பு மாவட்டத்தில் மூன்று தமிழ் எம்.பி.க்களை நாம் உருவாக்குவோம். ஏனென்றால் தமிழர்களுக்கு துன்பம் வந்தால் அது எனக்குத்தான் வலிக்கின்றது. எனவே எனக்கு துணையிருப்பதற்கு இன்னும் இரண்டு எம்.பி.க்களை நாம் பெறவேண்டும். இது இன வாதம் இல்லை. எங்களது உரிமை. அடுத்தவர்களின் உரிமைகளில் நாம் ஒருபோதும் அபகரிக்க மாட்டோம். அதேவேளையில் எங்களது உரிமைகளில் ஓர் அங்குலத்தையேனும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். எனவே ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உரிய முறையில் பெற்றுக்கொள்வதற்கு உரிய சந்தர்ப்பங்கள் எங்களுக்கு கிடைக்கவேண்டும். எங்கள் தன்மானத்தை விட்டு விட்டு வேட்பாளர் ஆசனங்களுக்காக நாங்கள் எவரிடமும் மன்றாடுவோம் என்று கிஞ்சித்தும் கருதவேண்டாம் என நான் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளேன் என ஜனநாயக மக்கள் முன் னணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com