அரசிற்கு எதிராக செயற்பட்டதாக ஜெனரல் பொன்சேகாவின் தேர்தல் காரியாலயத்திலிருந்து கைது செய்யப்பட்ட 14 பேரையும் கொழும்பு நீதிமன்று எவ்வித நிபந்தனையும் இல்லாமல் நேற்று விடுதலை செய்துள்ளது. கைது செய்யப்பட்டதிலிருந்து அவசரகாலச் சட்டத்தின் கீழ் (டிஓ) தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய குற்றப்புலனாய்வுத்துறையினர் அவர்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைப்பதற்கு நீதிமன்ற அனுமதி கோரியபோது, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீதிவான் கோரியுள்ளார். குற்றச்சாட்டுக்களை சீஐடி யினர் முன்வைக்க தவறியபோது, அனைவரையும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் நீதவான் செல்வி சம்பா ஜானகி ராஜரட்ண விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
14 பேரில் ஒருவர் சாதாரண பிரஜை , ஏனைய 13 பேரும் முன்னாள் இராணுவ மற்றும் விமானப்படையை சேர்ந்தோராகும்.
அதேநேரம் ஜெனரல் பொன்சேகாவின் மருமகன் தனுனவின் தாயாரான அசோக திலகரட்ணவை கல்சிசை நீதிமன்றில் ஆஜர் செய்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை விளக்க மறியில் வைக்ககோரியபோது அதற்கு அனுமதி மறுத்த நீதவான் அவருக்கு பிணைவழங்கியுள்ளார்.
தனியார் வங்கியொன்றில் காணப்பட்ட அவருக்கு சொந்தமான லொக்கர் ஒன்றில் இருந்து சுமார் 75 மில்லின் ரூபா பெறுமதியான பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பணம் தொடர்பாக இருவேறு கருத்துக்கள் வெளிவந்துள்ளது. அவரது வங்கியில் இருந்த பணம் ஜெனரல் பொன்சேகாவிற்கு சொந்தமான பணம் எனக் அரச தரப்பால் கூறப்படுகின்றது. மறுபுறத்தில் அப்பணம் ஜெனரல் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு கிடைத்த நன்கொடைகள் எனவும் அதற்கான சகல ஆதாரங்களையும் பொன்சேகாவின் வக்கீல்கள் நீதிமன்றுக்கு சமர்ப்பித்தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment