Friday, January 1, 2010

மலையக மக்கள் முன்னணியின் தலைவியாக திருமதி சந்திரசேகரன்

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் அநீதியொழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் மறைவைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவியாக திருமதி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மலையக மக்கள் முன்னணியின் உயர்மட்ட அரசியல் குழு இன்று கொழும்பில் கூடி ஏகமனதாக இந்தத்தீர்மானத்தினை எடுத்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னத்தில் கடந்தப் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தனித்துப்போட்டியிட்டு பாரளுமன்ற உறுப்பினராக பெரியசாமி சந்திரசேகரன் தெரிவு செய்யப்பட்டமைக்குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் சந்திரசேகரனின் திடீர் மறைவைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இரண்டாவதாக எஸ்.அருள்சாமியும் மூன்றாவதாக எம்.சிவலிங்கமும் உள்ளனர். இந்த இருவரும் தற்போது வேறு அமைப்புக்களில் அங்கத்துவம் பெறுவதால் எஸ்.அருள்சாமியை பாராளுமன்ற உறுப்பினராக நியமிகக்க கூடிய சந்தர்ப்பம் இல்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அமைச்சர் சந்திரசேகரனின் பாராளுமன்ற பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் உயர்பீடம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத்தெரிவிக்கப்படுகின்றது.

சந்திரசேகரனின் பூதவுடல் - நான்காம் திகதி தலவாக்கலையில் தகனம்
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் பூதவுடல் நாளை 11.00 மணிமுதல் 12.30 மணிவரை பாராளுமன்றக் கட்டடத்தில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5.00 மணி முதல் இலக்கம் 40, மெதவெலிகட, ராஜகிரிய என்ற விலாசத்திலுள்ள அமைச்சரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் கடுவளை வீதிவழியாக அமைச்சரின் சொந்த இடமான தலவாக்கலைக்குப் பூதவுடல் எடுத்துச்செல்லப்படும். கிதுல்கலையிலிருந்து மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பூதவுடலைப் பொறுப்பேற்று அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்வர்.

எதிர்வரும் நான்காம் திகதி மாலை 6.00 மணியளவில் தலவாக்கலை நகரசபை பொது மயானத்தில் அமைச்சரின் பூதவுடல் அரச மரியாதைகளுடன் தகனம் செய்யப்படவுள்ளது.

No comments:

Post a Comment