Wednesday, January 6, 2010

‘உணவு ஏற்றிச் செல்ல ஐ.சி.ஆர்.சி மறுத்தபோதும் வடக்கு மக்களை பட்டினி போட்டதில்லை’

சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் உணவு ஏற்றிச் செல்வதற்குக் கப்பலைத் தர மறுத்தபோதும் கூட நாம் வடக்கு மக்களை பட்டினி போட்டதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சிலாபம் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் பேரணிக் கூட்ட மொன்றில் உரை நிகழ்த்திய ஜனாதி பதி, சிலாபம் வரை யிலான பகுதியை ஈழம் வரைபடத்தில் பொறித்து வைத்து எல்லை நிர்ணயி த்திருந்த பயங்கரவாதிகளின் நட வடிக்கைகைளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை ஒன்றிணைக்க எம்மால் முடிந் துள்ளது. அதற்கான மக்கள் ஆதரவே இதுவெனவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் சிலாபம் நகர சபை விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மில்றோய் பெர்னாண்டோ, நியூமல் பெரேரா உட்பட முக்கிய ஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இப் பிரசாரக் கூட்டத்தில் மேலும் உரை நிகழ்த்திய ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ:- கடந்த வாரத்தில் நாம் களுத்துறை, அநுராதபுரம், மினுவாங்கொடை போன்ற பகுதிகளுக்குச் சென்றிருந்தோம். சென்ற இடமெல்லாம் பெரும் ஜனத்திரள்.

இன்று சிலாபத்தில் மூன்று தேர்தல் தொகுதிகளிலிருந்து மட்டுமே மக்கள் வருகை தந்திருந்த போதும் அச்சனத்திரளே இவ்விளையாட்டரங்கை நிறைத்துவிட்டுள் ளது. இம் மாபெரும் ஜனத்திரள் எமது அமோக வெற்றியை உறுதிப்படுத்துகின்றது.

எதிர்க் கட்சியினர் அரசியல் என்ற பெயரில் தமது குரோதத்தையும், விரோதத் தையும் காட்டுவதிலேயே மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றனர். எனினும் மக்கள் எப்போதும் எம் பக்கமே உள்ளனர்.

நாம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் யுத்தத்தை மேற்கொண்டிருந்த போதும் நாட்டின் அபிவிருத்தியை மறக்கவில்லை. முழு நாட்டையும் அபிவிருத்தி செய்தோம். நாடெங்கிலுமுள்ள வீதி, பாலங்கள் உட்பட சகல கிராமங்களையும் அபிவிருத்தி செய்தோம்.

உலக நாடுகளில் பெரும் உணவுப் பிரச்சினை ஏற்பட்ட போதும் நாம் எமது மக்களைப் பட்டினி போட்டதில்லை. வடக்கு கிழக்கு உட்பட சகல மக்களுக்கும் உணவு வழங்கினோம். பிரபாகரனுக்குக்கூட நாமே உணவு வழங்கினோம்.

நுரைச்சோலை, மேல் கொத்மலை போன்ற மின் உற்பத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் நாட்டு மக்கள் நலன் தொடர்பான சகலதையும் தடையின்றி முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

புத்தளம் – மன்னார் பாதையை விரைவில் திறப்போம். அதன் மூலம் இப்பகுதி மக்கள் மடுத் திருப்பதிக்குச் சுதந்திரமாகச் செல்ல வாய்ப்புக் கிடைக்கும். நாட்டில் உல்லாசப் பிரயாணத்துறை வீழ்ச்சி கண்ட யுகத்தை நாம் மாற்றியுள்ளோம். எதிர்காலத்தில் கற்பிட்டி போன்ற பிரதேசங்களை சுற்றுலாப் பிரதேசமாக மாற்றுவதே எமது நோக்கமாகும். சிலாபம், புத்தளம் நகரங்களோடு தொடர்புடைய பாதைகள் முழுமையான அபிவிருத்திக்கு உட்படுத்தப்படும்.

விவசாயிகளுக்காகக் குளங்களைப் புனரமைத்தது போன்று, தொழிலாளர்களுக்கு கைத்தொழில் பேட்டைகளை அமைத்து க்கொடுத்தது போன்று மீனவர்களுக்கான மீன் பிடித்துறை முகத்தையும் நாம் உருவாக்கிக் கொடுத்துள்ளோம்.

அதில் நிலவும் குறைபாடுகளையும் நாம் தீர்த்து வைப்போம். இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மீனவர்களை மீட்பதற்கு இந்திய அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள் ளதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
நன்றி தினகரன்

No comments:

Post a Comment