Tuesday, January 26, 2010

ஜெனரல் பொன்சேகாவின் பெயர் வாக்காளர் இடாப்பில் இல்லை.

இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான ஜெனரல் பொன்சேகாவின் பெயர் வாக்காளர் இடாப்பில் இல்லை என தெரியவருகின்றது. கடந்த 2008ம் ஆண்டு வாக்காளர் பதிவின்போது தான் பதிவுசெய்திருந்தபோதும் தனது பெயர் வாக்காளர் இடாப்பில் இடம்பெறாதமைக்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை என ஜெனரல் பொன்சேகா கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இவ்விடயத்தை வைத்து எதிர்தரப்பினர் மக்களை தவறான வழியில் கொண்டு செல்ல முனைவதாகவும், தனக்கு இந்த நாட்டில் பிரஜா உரிமை இல்லை என்ற பொய்யான தகவல் ஒன்றை மக்களுக்குகூற முனைப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறிய அவர், இந்நாட்டின் யாப்பிற்கு அமைய தேர்தலில் போட்டியிடுவதற்கான சகல தகமைகளும் உண்டு என்பதை மக்களுக்கு விசேட அறிக்கை ஒன்றின் மூலம் தெரியப்படுத்தியுள்ளதுடன், பொய்யான தகவல்களையிட்டு குழப்பமடையாமல் தமது வாக்குகளை உரிய முறையில் பயன்படுத்துமாறு நாட்டு மக்களை வேண்டியுள்ளார்.

இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணையாளர், சரத் பொன்சேகாவிற்கு இந்நாட்டில் தேர்தலில் போட்டியிடுவதற்கு சகல உரிமைகளும் உண்டு எனவும், அவ்வாறே அவர் இந்நாட்டின் ஜனாதிபதியாக செயல்படவும் முடியுமென தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment