Friday, January 15, 2010

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனை

அதியுயர் பாதுகாப்பு வலயம் என்பது அரசியல் பிரச்சினையல்ல.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆலோசனையொன்றை நான் முன்வைப்பேன். அதனை அடிப்படையாகக் கொண்டு அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுக்கள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஊடகங்களின் முக்கியஸ்தர்களை அலரி மாளிகையில் சந்தித்த ஜனாதிபதி இதனைக் கூறினார். நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

அதி உயர் பாதுகாப்பு வலயம் என்பது அரசியல் பிரச்சினையல்ல. அதனை ஒரு அரசியல் பிரச்சினையாக்கவும் விரும்பவில்லை. எனினும், மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டும் விட்டன. இது வெறுமனே 24 மணி நேரத்துள் செய்யக் கூடிய விடயமும் அல்ல.

படிப்படியாக மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள். மக்களின் பாதுகாப்பையும் நாட்டின் பாதுகாப்பையுமே முதன்மைப்படுத்தி செயற்படுகிறேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

என் மீது ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். அவை அனைத்தும் ஆதாரமற்றவை என்பதும் இன்று நிருபனமாகியுள்ளன. உண்மையிலேயே நான் கிராமத்திலிருந்து வந்தவன். என் மீது சுமத்தப்படுகின்ற குற்றச் சாட்டுக்களில் கூட பாரபட்சம் காட்டுகிறார்கள்.

சாப்பாட்டுக் கடையை வாங்கியிருக்கிறேன், சைக்கிள் விங்கலை வாங்கியிருக்கிறேன். சுவர்ணவாஹினியை வாங்கியிருக்கிறேன், அப்பலோவை வாங்கியிருக்கிறேன் என்ற குற்றச்சாட்டுக்கள். அவுஸ்திரேலியாவில் அப்பிள் தோட்டம் வைத்திருக்கிறேன், சுவிஸில் காணி வாங்கியிருக்கிறேன் என்ற குற்றச்சாட்டுக்களை ஏன் இவர்கள் வைக்கவில்லை?

குற்றச்சாட்டில் கூட இவன் மேன்மைப் பட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள். என்னை சிறுமைப்படுத்தியே குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கிறார்கள்.

என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இவர்கள் தரத்திற்கு நான் கீழிறங்கி பதில் சொல்ல வேண்டியதில்லை. அவை அனைத்தும் பொய்யானவை என்பது இன்று தெளிவாகியிருக்கிறது.

என் மீது பிழை இருந்தால் எனக்கு எதிராக நம்பிக் கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வந்திருக்கலாமே. 17 வருடங்களாக கெட்ட பெயரை வாங்கியதில்லை. அரசியல் ரீதியான குற்றங்களை முன்வைக்க அவர்கள் முன்வருவதில்லை.

இப்போது புதிதாக மற்றுமொரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள். கொழும்பில் 100 ஏக்கர் காணியை நான் வாங்கியிருக்கிறேனாம். அது எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. அப்படி இருந்தால் நான் அரச ஊழியர்களுக்கென அழகான தொடர்மாடி வீடமைப்புத் திட்டம் ஒன்றையே உருவாக்கி விடுவேன்.

அதி உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்படுவது குறித்து ஜனாதிபதியிடம் கேட்டபோது,
அதி உயர் பாதுகாப்பு பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்தும் விடயம் தொடர்பாக எமக்கு ஒரு இலக்கு இருக்கிறது. அதன்படி, படிப்படியாக இது நடை முறைப்படுத்தப்படும்.

அதி உயர்பாதுகாப்பு வலயம் என்பது நாட்டின் மிக முக்கிய கேந்திர நிலையங்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு செய்யப்பட்டுள்ளவை. எந்த நாட்டிலும் இவ்வாறான நடைமுறை இருக்கிறது. விமான நிலையம் ஒன்றை அண்டிய பகுதி எப்போதும் அதிஉயர் பாதுகாப்பு வலயம்தான். எந்த நாட்டிலும் விமான நிலையத்துள் நுழைந்துவிட முடியாது. ஆனால் மக்களின் குடியிருப்புகள், விளைநிலங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக் களுடன் நடத்திய பேச்சுவார்த்தை விபரம் என்ன என்று கூறமுடியுமா?

இரா சம்பந்தன் தலைமையிலான குழுவினர் சில கோரிக்கைகளை முன் வைத்தார்கள். அதில் வடக்கு கிழக்கு இணைப்பு என்பதும் உள்ளடக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளேன்.

அதி உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்படுதல், வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் நீக்கப்படுதல் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

அதி உயர் பாதுகாப்பு பகுதியில் மீளக் குடியமர்த்தும் பணிகள் நடைபெறுகின்றன. திடுதிப்பென இதனை செய்வதும் ஊடாக மற்றுமொரு ஈராக், ஈரான் போன்று ஆகிவிட முடியாது.

சுயாட்சி தொடர்பாகவும் அவர்கள் கோரிக்கை முன்வைத்திருத்தனர். சகலராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சகல கட்சிகளினதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய இனப் பிரச்சினைக்கான தீர்வு ஒன்றை முன்வைப்பதையே நான் விரும்புகிறேன்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆலோசனைகள், குழுக்கள் அமைக்கப்பட்டாலும் முற்றுப் பெற்றதாக இல்லை. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆலோசனையொன்றை நான் முன்வைப்பேன். அதனை அடிப்படையாகக் கொண்டு பேச்சுக்கள் மேற்கொள்ளலாம்.

இரண்டாவது முறையாகவும் நீங்கள் ஜனாதிபதியானால் உங்களுடைய வெளிநாட்டு கொள்கை என்னவாக இருக்கும்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் அமரர் பண்டாரநாயக்க ஆரம்பித்த அணி சேராக் கொள்கையையே தொடர்ந்தும் கடைப்பிடிப்பேன். அதுவே எனது வெளிநாட்டுக் கொள்கையாக அமையும்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிவாய்ப்பு குறித்து கேட்டபோது,

இரண்டாவது தடவையாகவும் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றிபெறுவது உறுதி. தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் என்னுடன் தான் உள்ளன.

கூட்டமைப்பு உட்பட தமிழ்க் கட்சிகள் பொன்சேகாவுடன் தானே உள்ளன?

மனோ கணேசன், அவர் ஒரு தனிநபர். கூட்டமைப்பு இன்று தொழில்படுவது சர்வதேசத்திலிருந்து வரும் அழுத்தங்களுக்கும், நிகழ்ச்சி நிரலுக்குமே தவிர மக்களின் தேவைக்காக அல்ல.

உங்கள் அரசியல் தீர்வு எவ்வாறு அமைய விருக்கிறது?

’மஹிந்த சிந்தனை’ தொலைநோக்கில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 13வது திருத்தச் சட்டம் இப்போது நடைமுறையில் இருக்கிறது. அத்துடன் மேல் சபை அமைப்பது குறித்தும் ஆராயப்படும்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவீர்களா?


இது நடைமுறைச் சாத்தியமற்றது. இவ்வாறான அதிகாரங்களை வழங்கும் போது மேலும் சிக்கல்களையே ஏற்படுத்தும்.

நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படுவது குறித்து ஆராய்வீர்களா?


நிறைவேற்று அதிகாரங்கள் என்ன என்பது பற்றி முதலில் எனக்கு நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். நான் எந்த நிறைவேற்று அதிகாரத்தை பிரயோகித்திருக்கிறேன்.

இந்த நாட்டின் பாதுகாப்பிற்காகவும், மக்களின் நன்மைக்காகவும் புலிகள் இயக்கத்தை தடை செய்ததும், நாட்டை துண்டாடச் செய்யும் ஒப்பந்தத்தை கிழித்தெறிந்ததுமே நிறைவேற்று அதிகாரத்தை கொண்டு செய்தவை எனலாம்.

ஜனாதிபதித் தேர்தல் என்பது வெறுமனே ஒரு தேர்தல் அல்ல. நாட்டையே ஒருவரிடம் ஒப்படைப்பதற்காக நடத்தப்படுகின்ற தேர்தல். இதில் மக்கள் சிந்திக்க வேண்டும். ஒரு தெளிவான நோக்கு இருக்க வேண்டும்.

இதற்காக வெறுமனே வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட முடியாது. வெறும் 10 பக்கங்களைக் கொண்ட கொள்கைப் பிரகடனத்தினூடாக சாதித்து விட முடியாது. இதுவே எதிர்க்கட்சியினரின் நிலை. இதனைக் கண்டு நான் அச்சப்பட போவதில்லை. அலட்டிக் கொள்ளப்போவதும் இல்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பத்திரிகை செய்தியொன்றை மேற்கோள்காட்டிய ஜனாதிபதி, அதில் ஸ்ரீல.மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்த கருத்து மற்றுமொரு அர்த்தத்தை உண்டு பண்ணுவதாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

தாயகத்தை நிர்வகிக்கும் சந்தர்ப்பம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளது. அதனை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றே ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இக்கூற்று பாரிய அர்த்தத்திற்கான வழி என்றும் கூறினார்.

1 comments :

Unknown January 15, 2010 at 8:56 AM  

he is man with vison so we all have to support him this time because we can not miss this oprtunity

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com