Friday, January 8, 2010

விரைவில் யாழ்- கொழும்பு இரவு நேர பஸ்சேவை.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான இரவுநேர இ.போ.ச பஸ்சேவை இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடபிராந்திய இ.போ.ச பொதுமுகாமையாளர் எஸ்.கணேசபிள்ளை தெரிவித்தார். ஏ9 வீதி 24 மணித்தியாலமும் பொதுமக்களின் பாவனைக்காகத் திறக்கப்பட்டுள்ளதையடுத்து இவ் இரவுநேர பஸ்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்து ஏ9 வீதியூடாக இராணுவ வழித்துணையின்றி சாதாரண பஸ்சேவைகள் நேற்று முதல் ஆரம்பாகியுள்ளன.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா,மன்னார், கண்டி, திருமலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களை நோக்கிப் புறப்பட்ட பஸ்வண்டிகள் ஏ9 வீதியில் இராணுவ வழித்துணையுடன், வாகனத் தொடரணியாகவே நடைபெற்றுவந்தன.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பஸ்கள் வவுனியா தேக்கவத்தையிலிருந்து இராணுவத்தினரின் அனுமதி பெற்றபின்பே பயணிகள் பிரயாணத்தை மேற்கொண்டு வந்தனர். இந்த நடைமுறையும் இப்போது மாற்றப்பட்டுள்ளது.

ஏதிர்வரும் வியாழன் முதல் இந்நடைமுறை மாற்றப்பட்டு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து பஸ்வண்டிகள் இ.போ.ச நேர அட்டவணைக்கமைய சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதுமுகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com