Friday, January 22, 2010

தமிழ் மக்களைக் கூட்டமைப்பு தவறாக வழி நடத்துகிறது

(தினகரன் ஆசிரியர் தலையங்கம்.) ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இப்போது தீவிரமாக ஈடுபடுகின்றது. எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாகக் கூட்டமைப்புத் தலைவர்கள் பிரசாரம் செய்கின்றார்கள்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தங்களை இனங்காட்டிக்கொள்ளும் இவர்கள் தாங்கள் பொன்சேகாவை ஆதரிப்பதைத் தமிழ் மக்களின் நலன்களைப் பொறுத்து நியாயப்படுத்துவதாகத் தெரியவில்லை.

தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் சரத் பொன்சேகா இதுவரையில் ஏதாவது செய்திருக்கின்றாரா என்பது பற்றியோ தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் உடனடி மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக என்ன செய்யப் போகின்றார் என்பது பற்றியோ கூட்டமைப்புத் தலைவர்கள் எதுவும் சொல்வதாக இல்லை. இவர்களால் எதுவும் சொல்ல முடியாது.

சிறுபான்மையினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்த சரத் பொன்சேகா அந்த மோசமான கருத்தை இது வரையில் மீளப்பெறவில்லை. தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் எதையும் இன்று வரை பொன்சேகா செய்யவில்லை. இனிமேல் செய்வாரென நம்புவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

தமிழ் மக்களைத் தவறாக வழிநடத்தித் துன்பத்தில் ஆழ்த்திய நீண்ட வரலாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்கு உண்டு. சுதந்திர இலங்கையில் தமிழ் அரசியல் வரலாற்றை ஆழ்ந்து நோக்கினால் இதைப் புரிந்து கொள்ளலாம்.

ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வை அடைவதற்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை இவர்கள் சரியான முறையில் பயன்படுத்தாததால் இனப் பிரச்சினை காலத்துக்குக் காலம் சிக்கலானதாக மாறியது.

வர்க்க நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட்ட காலங்களில் பிழையான விளக்கங்கள் கூறித் தமிழ் மக்களைத் தவறாக வழிநடத்தினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்பட்டதன் மூலம் தமிழ் மக்களின் பேரழிவுக்கும் பேரிடருக்கும் காரணமாகினார்கள்.

ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ் மக்களைத் தவறாக வழி நடத்தித் துன்பத்தில் தள்ளியது போலவே இப்போதும் தவறாக வழிநடத்துகின்றார்களா என்ற கேள்வி மிகவும் நியாயமானது. இதுவரை பயணித்த பிழையான பாதையிலேயே கூட்டமைப்புத் தலைவர்கள் இப்போதும் பயணிக்கின்றார்கள் என்ற கருத்து வலுவானதாக நிலவுகின்ற பின்னணியில் இக் கேள்வி அர்த்தமுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டிருந்தது. கடந்த பொதுத் தேர்தலின்போது வெளியிட்ட விஞ்ஞாபனத்தில் கூட்டமைப்பு அதைத் தெளிவாகக் கூறியிருந்தது. புலிகளைத் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக் கூட்டமைப்புத் தலைவர்கள் செயற்பட்டதன் விளைவாகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கண்கூடாகப் பார்த்தோம்.

அந்த ஏகபிரதிநிதித்துவ நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டுவிட்டதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இதுவரை கூறாததால் அந்த நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

புலிகளின் ஏகபிரதிநிதித்துவ நிலைப்பாடு தனிநாட்டுக் கோரிக் கையுடன் சம்பந்தப்பட்டதென்பதால் தமிழ் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் தனிநாட்டுக் கோட்பாட்டுடனேயே கூட்டமைப்பினர் இப்போதும் செயற்படுகின்றார்கள். அதை வெளிப்படையாகக் கூறாமல் அழிவுகரமான பாதையில் மீண்டும் தமிழ் மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றார்கள். மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com