Wednesday, January 13, 2010

ஊர்வலம் - இனியவன் இஸாறுதீன் -

ஊர்வலம் வருகிறது...
ஊர்வலம் வருகிறது....
அமைதிஊர்வலம் வருகிறது

ஊக்கமுள்ளோர்
உற்சாகமுள்ளோர்
கலந்துகொள்ளுங்கள்

ஊரை ஏய்ப்பவர்
ஊழல் செய்பவர்
ஒதுங்கிக்கொள்ளுங்கள்

இது
இனபேதமில்லாத இதயங்கள்
வழிநடத்தும்
அமைதிஊர்வலம்
சமூகங்களை ஒன்றுபடுத்தும்
சமாதான ஊர்வலம்

எல்லோருக்கும்
ஒரு முகம்
எல்லோருக்கும்
ஒரு குரல்

எந்த முகத்தையும்
தனியாய்
பார்க்க இயலாது
எந்தக் குரலையும்
தனியாய்
கேட்க இயலாது

இதோ
சர்வ இனங்களின்
சமாதான ஊர்வலம்

உலக மானுடத்தை
உயர்த்துதற்கும்
ஊன உள்ளங்களின்
உரிமை காப்பதற்கும்
ஊர்வலம் வருகிறது

இந்த ஊர்வலத்தில்
கலந்துகொண்டால்
கடந்தகாலக் கொடுங்கோல்களைச்
சுட்டிக்காட்டி
நிகழ்காலக் கொடுமைகளை
எடுத்துரைத்து
நம்பிக்கைமிக்க எதிர்காலத்திற்கு
வழி நடத்தும்

மோசக்காரர்களின்
முகத்திரை கிழிக்கும்
நீசக்காரர்களின்
அகக்கறை அழிக்கும்
ஆதிக்கக்காரர்களின்
ஆதிபத்தியத்தை ஒழிக்கும்

அந்நியம் செய்பவர்களே!
என்ன செய்கிறீர்கள்...
எங்கள் கோசம் கேட்டதா?
சமத்துவத்தொனியில்
சமரசம் பேசினோமே...
உள்ளத்தைத் தொட்டதா?

வறுமைப்பிணியை
விரட்டியடிக்கவும்
ஒருமைப்பாட்டின்
கரங்கள் கோர்க்கவும்
ஏற்றத்தாழ்வுகளை
இல்லாதொழிக்கவும்
ஊக்கமுள்ளோர்
உற்சாகமுள்ளோர்
கலந்துகொள்ளுங்கள்

அதோ...
அமைதிஊர்வலம் வருகிறது
எல்லோரும் வாருங்கள்

கவிதைகள் பகுதியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது VII

No comments:

Post a Comment