Wednesday, January 6, 2010

288 பேர் குடும்பமாக மீள் இணைவு

புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட 144 குடும்பங்களைத் துரிதமாக மீள இணைக்க நடவடிக்கை எடுத்தள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் தயா ரத்னாயக்க தெரிவித்தார். பெற்றோர் வேறாகவும் பிள்ளைகள் வேறாகவும் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்கள் முதல்தடவையாக குடும்பமாக ஒன்றிணைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மீளிணைக்கப்படும் குடும்பங்கள் வவுனியாவில் அமைக்கப்பட உள்ள குடும்பப் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட உள்ளனர்.

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக 144 குடும்பங்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் அவர்களின் 6 பிள்ளைகள் தமது பெற்றோருடன் தற்காலிக புனர்வாழ்வு முகாம்களில் தங்கியுள்ளதோடு 11 பிள்ளைகள் தமது உறவினர்களுடன் தங்கியுள்ளனர்.

மேற்படி 144 குடும்பங்களில் பலர் சட்டபூர்வமாக திருமணம் செய்திருக்கவில்லை எனவும் புலிகளின் அனுமதிப்படி மட்டுமே திருமணம் முடித்துள்ளதாகவும் ஆணையாளர் கூறினார். இவர்களுக்கு சட்டபூர்வமாக மணம்முடித்த வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் புலி உறுப்பினர்கள் 11,544 பேரில் 1,882 பேர் ஆண்கள், 8,667 பெண்கள், 590 பேர் சிறுவர்களாவர். இவர்களில் 4,143 பேர் திருமணமானவர்கள் எனவும், 6,849 பேர் திருமணமாகாதவர்கள் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் பணியகம் தெரிவித்தது.

இவர்களில் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடையே பிரிந்து காணப்படும் 144 குடும்பங்களை ஒரே இடத்தில் தங்கவைத்து புனர்வாழ்வு அளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் கூறினார். அவர்களின் பிள்ளைகளையும் தமது பெற்றோருடன் தங்கவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment