Saturday, September 5, 2009

எரிக் சொல்ஹெய்ம் இரட்டைவேடம் பூண்டுள்ளதாக கூறும் புலிகள்.

இலங்கையில் சமாதான செயற்பாடுகளில் அனுசரணையாளராகவும் பிரதான மத்தியஸ்தராகவும் பன்னெடுங்காலங்கள் செயற்பட்டுவந்த நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹேம் இரட்டைவேடம் பூண்டு செயற்பட்டு வந்தமை வெளிவருவதாக புலிகளின் ஊதுகுழல்களில் ஒன்றான இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் லண்டன் சனல் 4 தொலைக்காட்சியினால் ஒலிபரப்பு செய்யப்பட்டிருந்த வீடியோ பொய்யானது என அவர் கருத்துக் கூறியதையடுத்தே அவர் மீது புலிகள் சேறு பூசும் செய்திகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பிட்ட வீடியோக் காட்சி வெளியானபோது அக்காட்சிகள் தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்த அமைச்சர் எரிக் இது தொடர்பாக ஐ.நா உடனடி விசாரணை ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என ஐ.நா வின் செயலாளர் நாயகத்தை கேட்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து வீடியோ தொடர்பாக பல தரப்பாலும் பேசப்பட்டதுடன் குறிப்பிட்ட வீடியோ பொய்யானது என பல நிபுணர்களும் தெரிவித்துள்ளதை அடுத்து அது பொய்யென கருதிய அவர், தனது கருத்தை ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

தனி மனிதனின் கருத்துச் சுதந்திரத்தை என்றுமே ஏற்றுக்கொள்ளாத புலிகள் இன்று அவரை உலகமட்டத்தில் உள்ள ஓர் துரோகி என அறிவிக்கும் பொருட்டு செய்திகளை வெளியிடத்தொடங்கியுள்ளனர்.

எரிக்சொல்ஹேம் தொடர்பாக அவதூறான செய்தியை வெளியிட்டுள்ள குறிப்பிட்ட இணையத்தளம் தமிழ் மக்களை ஏமாற்றும் நோக்கில் ஊடக தர்மத்திற்கு அப்பாற் சென்று பல சர்சைக்குரிய தகவல்களை மக்களுக்கு வழங்கிவருவது கண்டனத்துக்குரியதாகும். அத்துடன் இவ்வாறன பொறுப்புணர்வற்ற செய்திகள் தொடர்ந்தும் தமிழ் மக்களை உலக அரங்கில் அனாதைகளாக்கும் செயல் என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment