Tuesday, June 23, 2009

மூன்று வருடத்துக்குள் வடக்கில் 325,000 புதிய வீடுகள்

மூன்று வருட வேலைத்திட்டத்திற்கமைய வடமாகாணத்தில் புதிதாக 325,000 வீடுகள் அமைக்கப்படவிருக்கும் அதேநேரம், அங்கு 150,000 வீடுகள் புனரமைத்துக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பாக, வடக்கின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணிக் குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் மோதல்களால் பாதிக்கப்பட்ட வடபகுதியின் பெருந்தெருக்கள், மின்சார விநியோகம், வீடுகள், நீர் விநியோகம், விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்திகள் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டன.

தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கு துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஏ மற்றும் பீ தர வீதிகளைப் புனரமைப்பதற்கென ஏற்கனவே 72 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், இந்த வீதி அபிவிருத்திப் பணிகள் 180 நாட்களில் பூர்த்தியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், மூன்று வருட வேலைத்திட்டத்தின் கீழ் 11.5 பில்லியன் ரூபா செலவில் 325,000 புதிய வீடுகள் அமைப்பதற்கும், 150,000 வீடுகளைப் புனரமைப்பதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

முன்னுரிமை அடிப்படையில் இந்தப் பகுதிகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் வசதிகள் செய்துகொடுக்கப்படும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் டிக்சன் டெல பண்டார, மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், மாவட்டச் செயலாளர் மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் மனிதநேய விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி மேஜர் ஜென்ரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழர் தரப்புத் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் எதிர்ப்பு அரசியலால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படவில்லையெனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனை மக்கள் தற்பொழுது உணர்ந்திருப்பதாகவும் கூறினார்.
Thanks INL


No comments:

Post a Comment