Saturday, June 6, 2009

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள கர்ப்பிணிகளில் அதிகமானோர் 16-17 வயது யுவதிகள்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுள் காணப்படும் 3100 கர்ப்பிணிகளில் 60 சதவீதமானோர் 16 ல் இருந்து 17 வயது வரையான யுவதிகள் என தெரியவந்துள்ளது. இவர்களில் 2900 பேர் தற்போது மகப்பேற்று வைத்தியர்களின் ஆலோனைகளைப் பெற்றுவருவதாகவும் அவர்களுக்கான மருந்து மற்றும் போசாக்கு தேவைகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவர்களுக்கு தேவையேற்படும்போது இரத்தம் வழங்குவதற்கு ஏதுவாக அங்கு இரத்த வங்கி ஒன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தை மேற்படி கர்ப்பிணி பெண்களுக்காக ஒதுக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளை நிராகரித்து தமிழ் மக்கள் வெளியேறியபோது, அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களுள் வரும் பெண்கள் மீது அரசினால் திட்டமிட்ட முறையில் கருத்தடை ஊசி ஏற்றப்படுவதாகவும் கர்ப்பிணிப்பெண்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக கருக்கலைப்பிற்கு உட்படுத்தியதாகவும் புலிகளால் பரப்பட்ட செய்திகளுக்கு நேர் எதிராக இச்செய்தி வெளிவந்துள்ளது.

யுவதிகள் வன்னியில் இருந்தபோது புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் இருந்து தப்புவித்துக் கொள்வதற்காக பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சிறுவயதிலேலே திருமணங்களை செய்து கொடுத்துள்ளனர். கர்பிணிகளாக இருக்கும் போது புலிகளின் கட்டாய யுத்தத்திற்கு செல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற எதிர்பார்பில் பெரும்பாலான பராயமடையாத சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளனர். ஆனால் இங்கு பிறக்கப்போகும் குழந்தைகளுகளில் பலருக்கு தமது தந்தையை பார்க்கும் பாக்கியம் கிடைக்காமல் போக இருக்கின்றது. காரணம் தாய்மார் கர்ப்பம் அடைந்திருந்தாலும் தந்தையர் புலிகளினால் கட்டாய யுத்தத்திற்காக பிடித்துச் செல்லப்பட்டு பலி கொடுக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment