Friday, May 22, 2009

அரசியல் ரீதியான தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்குமாறு ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை

இலங்கையில் விரைவில் அரசியல் ரீதியான தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்குமாறு அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தொலைபேசி ஊடாக கோரிக்கை விடுத்துள்ளதாக அமெரிக்க ராஜாங்க செயலகத்தின் பேச்சாளர் இயன் கெலி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தத்தினால் 300,000 அதிகமான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வதாகவும் அவர்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கலந்துரையாடிய பின்னர், இலங்கை ஜனாதிபதியுடன் ஹிலரி கிளிண்டன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

யுத்த வலயத்தின் மனிதாபிமான நிலவரங்களை நேரில் பார்வையிட்டு மதிப்பீடுகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 26 வருடங்களாக இடம்பெற்ற மோதல் முடிவுக்கு வந்திருப்பதால் தமிழர்களது உரிமைகளை உறுதிப்படுத்துமாறு அவர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே எதிர்கால சமாதானம் நிர்ணயிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படவிருந்த சர்வதேச நாணயநிதியத்தின் கடன் குறித்து தற்போது மீள் பரிசீலனை செய்யப்படும் எனவும் அமெரிக்க ராஜாங்க செயலகத்தின் பேச்சாளர் இயன் கெலி இதன் போது தெரிவித்தார்.

இலங்கையில் மோதல்கள் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டிருந்த தருணத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை வழங்குவதற்கு இது தருணமல்ல எனத் தெரிவித்து அமெரிக்கா கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளைப் பின்போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment