Tuesday, May 5, 2009

மட்டு-மாணவி கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை.

கடந்த வாரம் மட்டக்களப்பு பிரதேசத்தில் மூன்று சிறுவர்கள் கடத்தப்பட்டிருந்தனர். அவர்களில் ஒரு மாணவி கொலை செய்யப்பட்டு கிணறொன்றினுள் வீசப்பட்டிருந்தார். அவரது கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இன்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டள்ளதாக பொலிஸ்பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை மேலதிக விசாரணைக்காக குற்றம் இடம்பெற்ற இடத்திற்கு எடுத்துச்செல்கையில் அவர்கள் பொலிஸாரைத் தாக்க முற்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இம் மாணவி கடத்தப்பட்டு, கப்பம் கோரப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதாகி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் கல்லியங்காடு (பாரதி ஒழுங்கை) பகுதியைச் சேர்ந்த மகிந்ததாஸ் மயூரன் (வயது 24),எட்வேர்ட் ஜூலியட் ஸ்டனிஸ்லோஸ் (வயது 20),ஏரன்ஸ் ஒழுங்கையைச் சேர்ந்த சம்பா எனப்படும் சோமசுந்தரம் அனுஷன் (வயது 19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாணவி கடத்தப்பட்டு முதலாவது சந்தேக நபருடைய வீட்டிலேயே தடுத்து வைக்கப்பட்டு,பின்னர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரிய வருவதாகப் பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

சந்தேகநபர்கள் இவ்வாறு கொலை செய்யப்படும்போது இவர்களது பின்னணி என்னவென்று மக்கள் அறிவதற்கு வாய்பில்லாமல் போவதுடன் இவர்களை இயக்குகின்ற சக்திகள் காப்பாற்றப்படும் பாரிய தவறு இழைக்கப்படுகின்றது என மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com