Saturday, May 30, 2009

மதிச்சுவர். –வம்சிகன்-

முல்லைக் கடலில்
நிலவு குளிக்கும்.

தெறிக்கும் அலையின்
ஒவ்வொரு துளிக்குள்ளும்
ஒவ்வொரு நிலவு.

பார்க்கப் பார்க்க
வேதனை வடிந்து
கரைகள் நனையும்.

இறக்கி வைத்த
இழப்பெனும் பாறையை
காலம் அரிக்கும்
மணலாய்த் திரிக்கும்.

பிஞ்சுப் பாதங்கள்
தடங்கள் பதிக்கும்.

இனிவரும் இரவில்
இருளிருக்காது.

இனிவரும் பகலில்
நிழல் ஒழுகாது.

சுற்றாத பூமியில்
வாழ்வது கைவரும்.

இமயத்துக் காற்றைக்
கண்களாற் கண்டு
கைகளில் பிடித்ததாய்
சீனத்து வித்தைகள்
நம் வீதிகளிலும்
நடக்கும்.

இலங்கை முழுவதும்
நமக்கும் சொந்தம்.

இது
இன்னொரு சுதந்திரம்.
உணர்ந்தால் வசந்தம்.

இரு மொழி விழி வழி
இலங்கையாய்ப் பார்.

இதுவே
வீரிய இலங்கையின்
விளைநில வேர்.

VII


No comments:

Post a Comment