Monday, April 20, 2009

சரணடையும் புலிகளுக்கு புனர்வாழ்வு - ஜனாதிபதி



எஞ்சியுள்ள புலிகள் சரணடையும் பட்சத்தில் அவர்களுக்குப் புனர்வாழ்வளித்து நாட்டுக்குப் பலன் தரக்கூடிய பிரஜைகளாக்குவதே எனது நோக்கம். இது நடை முறைச் சாத்தியமான காரியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

பிரபாகரனுக்கு எதிராகப் பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்கள் வெளியேறி வரத் தொடங்கி விட்டதால் எஞ்சியுள்ள புலிகள் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றில் சண்டையிட்டு மடிய வேண்டும். அல்லது சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத் தின் மேல் மாகாணப் பட்டதாரிகள் மாநாடு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இவ் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், யுத்த நிறுத்தம் பற்றியோ தாக்குதல் இடைநிறுத்தம் குறித்தோ எம்மோடு பேசுவதில் பலனில்லை. நாம் ஏற்கனவே 72 மணிநேர கால அவகாசம் வழங்கினோம்.

அதற்குப் பிறகு 42 மணிநேர அவகாசம் வழங்கினோம். அவர்களுக்கு (புலிகளுக்கு) போதியளவு கால அவகாசம் வழங்கியுள்ளோம். நீங்கள், புலிகளின் தலைவருக்கு கூறி ஒரு மணி நேர கால அவகாசம் அல்ல அரைமணி நேர கால அவகாசம் பெற்றுக்கொடுங்கள்.

புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள அப்பாவி மக்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வந்துசேர அக்கால அவகாசமே போதும்.

புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள மக்கள் பாதுகாப்பு படையினரின் பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்ததும் அங்கு எஞ்சப்போவது புலிகள் மட்டுமே. ஆகவே, புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டுச் சரணடைய வேண்டும். இல்லாவிடில் எமது பாதுகாப்புப் படையினருடன் சண்டையிட்டு மடிய வேண்டும். அல்லது சயனைட் வில்லை அருந்தி தற்கொலை செய்து கொள்ளவே நேரிடும்.

எஞ்சியுள்ள புலிகள் சரணடைய வேண்டும். எவரும் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. எஞ்சியுள்ள புலிகள் சரணடைவார்களாயின் அவர்களுக்குப் புனர்வாழ்வளித்து நாட்டுக்குப் பயனுள்ள பிரஜைகளாக்குவதே எனது நோக்கம். இது நடைமுறைச் சாத்தியமான காரியம்.

பிரபாகரனை இந்தியாவும் கேட்டுள்ளது. அவருக்கு இந்நாட்டு நீதிமன்றத்திலும் வழக்குள்ளது.
ஆகவே அவர் சட்டத்திற்கு முன் ஆஜர்படுத்தப்பட்டு அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

புலிகளால் பாதுகாப்பு வலயத்தினுள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளவர்களில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி சிவிலியன்கள் கழுத்தளவு தண் ணீரில் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் நேற்று நண்பகலாகும் போது பாதுகாப்புப் பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்தனர். இவர் களோடு தற்கொலை புலிகளும் வந்து தங்களை வெடிக்க வைத்து அப்பாவி மக்க ளைப் படுகொலை செய்தனர் காயப்படுத்தினர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்து வரப்பட்டுள்ளனர்.

பிரபாகரனுக்கு எதிராக மக்கள் பாதுகாப்பு பிரதேசங்களை நோக்கி வரத் தொடங்கி விட்டனர். உலக வரலாற்றில் புலிகளால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள பாரியளவு அப்பாவி மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை எமது படையினர் வெற்றிகரமாக முன்னெடுக்கின்றனர் என்றார்.

இவ் வைபவத்தில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, அனுர பிரியதர்ஷன யாப்பா, டளஸ் அழகப்பெரும, பாட்டளி சம்பிக்க ரணவக்க, டிலான் பெரேரா, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகரும் ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ.எச்.எம். அஸ்வர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment